PhD படித்த M.Pக்களில் அதிகம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்! 100 சதவீத இடத்தை தட்டிச் சென்ற விசிக!

PhD படித்த M.Pக்களில் அதிகம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்!
அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்த விசிக…
மக்களவைக்கு 543 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இதில் வெறும் 28 பேர் மட்டுமே ஆராய்ச்சி படிப்பு என்று சொல்லக் கூடிய பி.எச்.டி. படித்தவர்கள். இந்த 28 பேரில் ஒப்பீட்டளவில் அதிகபட்சமாக 4 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதில் 2 பேர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி.க்கள்.
ஒட்டுமொத்த கிராமமும் இஸ்லாத்தை தழுவிய மீனாட்சிபுரம் சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்து, டாக்டர் பட்டம் வாங்கிய திருமாவளவன் மற்றும் நந்தனார் தொடர்பாக ஆய்வு செய்து டாக்டர் பட்டம் வாங்கி ரவிக்குமார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாக அகில இந்திய அளவில் கவனிக்கப்பட்டுள்ளனர்.
தென்சென்னை எம்.பி, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் கோவை திமுக எம்.பி, கணபதி ராஜ்குமார் ஆகியோரும் பிச்.டி. பட்டம் பெற்றவர்கள் ஆவர். 80 எம்.பிக்களை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 5 எம்.பி.க்கள் மட்டுமே பி.எச்.டி பட்டம் பெற்றுள்ளனர். பி.எச்.டி. பட்டம் பெற்ற 28 எம்.பி.க்களில் 2 பேர் மட்டுமே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த, விசிக எம்.பி.க்கள்.
எனவே பி.எச்.டி. படித்த எம்.பி.க்களை கொண்ட அரசியல் கட்சி என்ற வரிசையில் அகில இந்திய அளவில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று விசிக முதல் இடத்தில் உள்ளது. பி.எச்.டி. படித்த பிற 26 எம்.பி.க்களும் உயர் வகுப்பு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அரியலூர் மாவட்டம் அங்கனூர் என்ற கிராமத்தில் பிறந்து, பள்ளிப் படிப்பிற்காக 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திட்டக்குடிக்குச் சென்று அதனை பூர்த்தி செய்தவர் தொல். திருமாவளவன். சென்னை மாநிலக்கல்லூரியில் இளங்கலை கெமிஸ்ட்ரி பட்டம் வாங்கினார். சென்னை சட்டக்கல்லூரியில் கிரிமினாலஜியில் மாஸ்டர் டிகிரி வாங்கினார்.
திருநெல்வேலி மீனாட்சிபுரம் இஸ்லாமிய மார்க்கத் தழுவல் சம்பவத்தை ஆராய்ச்சி செய்து, மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், விக்டிமாலஜி பிரிவில் பி.எச்.டி. பட்டம் வாங்கினார். இஸ்லாமிய மார்க்கத்தை தழுவிய தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரின் 2வது மற்றும் 3வது தலைமுறையினர் சாதி ரீதியான அடக்குமுறைகளில் இருந்து விடுபட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.
அரசு வேலைவாய்ப்பில் இணைந்த தொல். திருமாவளவன், அந்த வருமானத்தை, தலித் அரசியல், சமூக பணிகளுக்கு செலவு செய்தார். அதற்கு பிறகு, அரசு வேலையை உதறித் தள்ளி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் முழுநேர அரசியலில் ஈடுபட்டார்.
தனது செயல்பாடுகளுக்கு இடையூறு இருந்ததாக கருதி, எம்எல்ஏ பதவியை கூட ராஜினாமா செய்துள்ளார்.
தற்போது, 3 முறை எம்.பி.யாக நாடாளுமன்றத்தை அலங்கரித்துள்ள திருமாவளவன், அகில இந்திய அளவில் அதிகம் படித்த எம்.பி.க்களை கொண்ட கட்சி என்ற பெருமையை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பெற்றுக் கொடுத்து, முன்மாதிரி தலைவராக உருவெடுத்துள்ளார்.
=========