மலேசிய அரசிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட “மெட்டா”!

ஹமாஸ் தலைவரின் கொலைக்கு மலேசிய பிரதமர் கண்டனம்…
முகநூல் பதிவை நீக்கிய மெட்டாவின் நடவடிக்கையால் சர்ச்சை…
பகிரங்க மன்னிப்பு கேட்டு, மீண்டும் பதிவுக்கு அனுமதி…
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதை கண்டித்து, இரங்கல் செய்தி ஒன்றை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முகநூலில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை முகநூல் நிறுவனமான மெட்டா நீக்கியது. இதனால் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து மெட்டா நிறுவனத்திடம் மலேசியா விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
அந்த நோட்டீசில் மெட்டாவின் இந்த நடவடிக்கை, பாரபட்சமானது, அநீதியானது மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான கண்மூடித்தனமான தாக்குதல் என கண்டிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதில் அளித்துள்ள மெட்டா நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
மேலும் மெட்டா அளித்துள்ள விளக்கத்தில் கூறியுள்ளதாவது, முகநூல் மற்றும் இண்ஸ்டகிராமில், மலேசிய பிரதமரின் பதிவு நீக்கப்பட்டதற்கு காரணம், operational error அதாவது, தொழில்நுட்ப கோளாறு ஆகும். இதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். மேலும் அந்த பதிவு நம்பகத்தன்மை வாய்ந்தது என்ற அடையாளத்துடன் மீண்டும் முகநூலில் இடம்பிடித்துள்ளது. இவ்வாறு மெட்டா தெரிவித்துள்ளது.