உலகம்

ரூ. 34 கோடி கொடுத்து தொழிலாளியின் உயிரை காப்பாற்றிய மலையாளிகள்! இந்த ஒற்றுமை அனைவருக்கும் பாடம்!

மரண தண்டனை விதிக்கப்பட்டு, சவுதி சிறையில் 18 ஆண்டுகள் வாடிய அப்துல் ரஹீம்…
மதம், கட்சிகளை கடந்து மனித நேயத்தை நிலைநாட்டிய மலையாளிகள்…
34 கோடி ரூபாய் பணயத் தொகை கட்டி, மீட்கப்பட உள்ள இளைஞர்…

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள மாற்றுத் திறனாளி சிறுவனை பராமரிக்கும் வேலையை பார்த்து வந்துள்ளார். அந்த மாற்றுத் திறனாளி சிறுவன் சுவாச பிரச்னை உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளானவர்.

ஒரு முறை, அந்த சிறுவனை காரில் அழைத்துச் சென்றபோது, அந்த சிறுவன், டிராபிக் சிக்னலை மீறிச் சென்றுவிடுமாறு, டிரைவர் அப்துல் ரஹீமுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் அப்துல் ரஹீம் அதற்கு செவி சாய்க்காததால், அந்த சிறுவன் டிரைவரை தாக்க முயன்றுள்ளார். இந்த சலசலப்பில் சிறுவனின் தோள்பட்டையில் பொருத்தப்பட்டிருந்த, சுவாசக் கருவி, கழண்று விழுந்துள்ளது. அதனை அப்துல் ரஹீமால் மீண்டும் பொருத்த முடியவில்லை. இதனையடுத்து அந்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

அதனைத் தொடர்ந்து அப்துல் ரஹீம் மீது சவூதியில் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு சவுதி நீதிமன்றம் அப்துல் ரஹீமுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

SaveRahim raises Rs 34 crore to free Keralite on death row in Saudi Arabia | Kozhikode News - Times of Indiaஇந்த தீர்ப்பு கேரளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுவனின் குடும்பத்தினரிடம் அப்துல் ரஹீமை மன்னிக்க வேண்டும் என்று பல தரப்பினரும் விடுத்த கோரிக்கையை சிறுவனின் குடும்பம் ஏற்க மறுத்துவிட்டது.

அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் 1.5 கோடி ரியால் பணத்தை அளித்தால் அப்துல் ரஹீமை மன்னிப்பதாக உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த செய்தி கேரள மீடியாக்களில் வெளியான நிலையில், அப்துல் ரஹீமின் விடுதலைக்கு பணம் திரட்ட இயக்கம் ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கீழ் இயங்கும் கேரள முஸ்லிம் கலாச்சார மையத்தின் சார்பில் இந்த இயக்கம் தொடக்கப்பட்டாலும் மதம், கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் இந்த இயக்கத்துக்கு கேரள மக்கள் தங்களால் முடிந்த அளவு நிதியினை வாரி வழங்கினர்.
நிதி வசூல் செய்வதற்கென அமைக்கப்பட்ட குழுவில் சிபிஎம், காங்கிரஸ் ஏன் பாஜகவை சேர்ந்தவர்கள் கூட உறுப்பினர்களாக இடம்பெற்று இருந்தனர்.

1.5 கோடி ரியால் என்பது இந்திய மதிப்பில் 34.45 கோடிக்கு சமம் என்ற சூழலில் இதற்கான நிதிவசூல் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்துவந்தது, இந்த நிலையில், தற்போது 34.45 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் யாரும் மேற்கொண்டு பணம் அனுப்பவேண்டாம் என்றும், கூடுதலாக வசூலாகியுள்ள பணம் தணிக்கை செய்யப்பட்டு நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கேரள மக்களின் நிதியுதவியோடு பெறப்பட்ட இந்த நிதி விரைவில் இந்திய தூதரகத்தின் உதவியோடு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அப்துல் ரஹீமின் மன்னிப்பை கோரும் நிதியாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் 18 ஆண்டு சிறைத்தண்டனைக்கு பின்னர் விரைவில் அப்துல் ரஹீம் விடுதலை பெரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தியை குறிப்பிட்டு இதுதான் ரியல் கேரளா ஸ்டோரி என பலரும் குறிப்பிட்டு கேரள மக்களின் மதத்துக்கு அப்பாற்பட்ட ஒற்றுமையை பாராட்டி வருகின்றனர்.
==============

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button