ஹமாஸை ஒடுக்க நினைத்த மக்மூத் அப்பாஸ் – தர்ம அடி கொடுத்த ஹமாஸ் – பாலஸ்தீன் உள்நாட்டுப் போர் ஒரு பார்வை!

பாலஸ்தீனத்துக்கு தனி ராணுவம், உளவுத்துறையை அமைக்க ஹமாஸ் முயற்சி செய்ததையும், அதனை ஒடுக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் சக பாலஸ்தீனியர்களையே துண்டிவிட்டு, ரத்தக் களறி ஏற்படுத்திய நிகழ்வுகளையும் பார்க்கலாம்.தனி பாலஸ்தீன நாடு உருவாகி, அதனை ஹமாஸ் போன்ற அமைப்பு ஆட்சி செய்தால், எதிர்காலம் என்ன ஆவது என்ற அச்சம் இஸ்ரேலுக்கு ஏற்பட்டது.இஸ்ரேல் பயந்தது போன்றே, 2006 ஆம் ஆண்டு தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்தது ஹமாஸ். உடனடியாக தனி ராணுவம், காவல்துறை, உளவுத்துறையை உருவாக்கப் போவதாக ஹமாஸ் அறிவித்தது.ஏற்கனவே மக்மூத் அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அத்தாரிட்டியின் கீழ், காவல்துறை, அதிரடிப்படை, உளவுத்துறை என சுமார் 60 ஆயிரம் பேர் கொண்ட படை இருந்தது.
மக்மூத் அப்பாசின் கீழ் இருந்த குடியரசுத் தலைவரின் படையில் சுமார் 3500 சிறப்பு வீரர்கள் இருந்தனர். இவர்களுக்கு பயிற்சி, ஆயுதம் வழங்குவதற்காக அமெரிக்கா 59 மில்லியன் டாலர்களை செலவு செய்தது.அரபு நாடுகளையும் நிதி உதவி செய்ய வலியுறுத்தியது. இந்த படை இலகுரக ஆயுதங்களை வைத்துக் கொள்ளலாம் என இஸ்ரேலும் சம்மதித்தது. எகிப்து, ஜோர்டான் ராணுவமும், இந்த படைக்கு பயிற்சிகளை அளித்தன.ஆனால் இந்தப் படை மக்மூத் அப்பாசுக்கும், இஸ்ரேலுக்கும் மட்டுமே விசுவாசமாக இருப்பார்கள், நமக்கு கட்டுப்பட மாட்டார்கள் என நினைத்த, ஹமாஸ், காசாவில் இருந்து, அப்பாசின் படைகளை வெளியேற உத்தரவிட்டது.இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள், மக்மூத் அப்பாசுக்கு கொம்பு சீவிவிட்டன. இரு தரப்பு இடையே உள்நாட்டு போர் மூண்டது. சொந்த சகோதரர்கள் ஒருவருடன் ஒருவர் போரிட்டு வல்லாதிக்க சக்திகளுக்கு இறையாகினர்.
தன்னிடம் ஒட்டு மொத்தமாக 75 ஆயிரம் வீரர்கள் இருந்ததால், வெறும் 15 ஆயிரம் வீரர்களை மட்டுமே வைத்திருந்த ஹமாஸை மூட்டை பூச்சியை போல் நசுக்கி விடலாம் என நினைத்தார் மக்மூத் அப்பாஸ்.பயிற்சி பெற்ற பலமான படை, அமெரிக்க பணம், ஆயுதம் என எல்லாம் தன்னிடம் இருப்பதாக நினைத்தார் மக்மூத் அப்பாஸ்.ஆனால் போரின் முடிவு வேறுவிதமாக அமைந்தது. அப்பாசின் படைகளை, காசா கரையில் கசக்கி காயப்போட்டது ஹமாஸ்.ஹமாஸ் தரப்பில் 83 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் அப்பாஸ் தரப்பில் 165 பேர் கொல்லப்பட்டனர். தங்களுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்ட சிலருக்கு மரண தண்டனை வழங்கியது ஹமாஸ். சிலர் கைதிகளாக பிடிபட்டனர். அப்பாசின் படைகள் நிரந்தரமாக காசாவில் இருந்து வெளியேற்றப்பட்டது.இந்த உள்நாட்டுப் போர் வெற்றி, ஹமாஸ் அமைப்பின் செல்வாக்கை உலக நாடுகள் மத்தியிலும், பாலஸ்தீனர்கள் மத்தியிலும் உயர்த்தியது. மக்மூத் அப்பாசுக்கு பெரும் சோர்வை கொடுத்தது. எனினும் மேற்குகரையை கைவிட்டு, காசாவுக்குள் கவனம் செலுத்தியது ஹமாஸ்.