கே.எல். ராகுலை,திட்டிய உரிமையாளர் – களமிறங்கிய சேவாக்! பணம் கொழிக்கும் ஐ.பி.எல். இன் மறுமுகம்!

பணம் காய்க்கும் மரமான ஐ.பி.எல். போட்டிகள். கே.எல். ராகுலை திட்டிய உரிமையாளர் மூலம் உண்மையை உரைத்த சேவாக்.தோற்றாலும் 400 கோடி ரூபாய் கிடைப்பது எப்படி?
உலகின் லாபம் கொழிக்கும் விளையாட்டுகளில் ஒன்றாக ஐ.பி.எல். தொடர் உள்ளது. வேலையையும், நேரத்தையும், கொடுத்து, இந்த விளையாட்டை பார்த்து வரும் கோடிக்கணக்கான மக்கள் மூலம் பல்லாயிரம் கோடி வருமானத்தை பண முதலலைகள் சம்பாதித்து வருகின்றனர்.
தற்போது, அந்த போட்டியில் ஒரு சலசலப்பு. அதாவது, லக்னோ அணி, ஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அணியின் கேப்டன் கே.எல். ராகுலை நேரடியாக சென்று வருத்தெடுத்து விட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, பலரும் கோயங்காவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் குரல்கள் ஒலித்து வருகின்றன.
இந்த நிலையில் தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். அதாவது ஒரு அணியின் உரிமையாளர், கேப்டனை சந்திக்கும் போது, அவரை ஊக்குவிக்க வேண்டுமே தவிர, இதுபோன்று நடந்து கொள்ளக் கூடாது.
தொழில் அதிபர்களை பொருத்தவரை லாபம் நட்ட கணக்கு மட்டுமே பார்ப்பார்கள். எப்படி பார்த்தாலும், இந்த தொடரில் இருந்து லக்னோ வெளியேறினால் கூட, அந்த அணி உரிமையாளர் 400 கோடி லாபம் பெறத் தான் போகிறார்.
பிறகு ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும். அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டு, ஊக்குவிக்கும் வேலையை மட்டுமே அணி உரிமையாளர் செய்ய வேண்டும் என சேவாக் அறிவுறுத்தியுள்ளார்.
இங்கு எல்லோருக்கும் எழும் கேள்வி, தோல்வி அடைந்து வெளியேறும் லக்னோ அணி எப்படி, 400 கோடி ரூபாயை சம்பாதிக்கும் என்பது தான். ஐ.பி.எல். போட்டிகளை பொருத்தவரை, அதில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அணியும்,
அதில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பிரபல்யத்தை கருத்தில் கொண்டு, விளம்பர பிராண்டுகள் மூலம் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர்.மீடியா ரைட்ஸ் மூலம் ஒரு பக்கம் வருமானம் குவிகிறது. இதற்கு மட்டும் மீடியாக்கள், 23,575 கோடி ரூபாய் கட்டணத்தை, பிசிசிஐக்கு வழங்கியுள்ளனர்.
இந்த கட்டணம் அணிகளின் தர வரிசைக்கு தகுந்தார்போல் பகிர்ந்து வழங்கப்படுகிறது. அடுத்ததாக மைதானங்களில் வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டணங்களில் இருந்து 10 சதவீத தொகை அணிகளுக்கு போய் சேருகிறது.அடுத்ததாக மெர்ச்சன்டைசிங் மூலம் வரும் வருவாய்.
அதாவது, வீரர்களின் டீ சர்ட், கேப், பேட், வாட்ச் உள்ளிட்டவைகளில் இடம்பெறும் வணிக நிறுவனங்களின் குறியீடுகள் மூலம் மட்டும் 30 மில்லியன் டாலர்கள் வருவாய் கிடைக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில், 250 கோடி ரூபாய்.
மேலும் பங்குச்சந்தை மூலம் கிடைக்கும் லாபமும் முக்கியமாக உள்ளது. அதாவது ஒரு அணிக்கு அதிக லாபம் கிடைக்கும் போது, அந்த அணியின் உரிமையாளரிடம் இருந்து, பங்குகளை வாங்க பெரு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.
இதன் பங்குகளின் விலை அதிகரித்து, ஏற்கனவே பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு அதிலும் லாபம் கிடைக்கிறது.அடுத்ததாக வர்த்தக நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப். மைதானத்தில் கண்ணுக்கு தெரியும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விலை உண்டு.
ஜெர்சிகளின் மீது உள்ள 6 பிராண்டுகளின் லோகோக்கள், பேண்ட் மீது உள்ள 2 பிராண்டுகளின் லோகோக்கள், கேப் மீது உள்ள 2 லோகோக்கள் என அனைத்தும் அந்த அணிக்கு பணத்தை கொடுக்கும் மரங்கள் ஆகும் .ஐ.பி.எல்.இன் பிராண்டு வேலிவ் சுமார் 9 லட்சம் கோடி ரூபாய்.
விளம்பரங்கள் மூலமாக மட்டும் ஐ.பி.எல் நிர்வாகத்துக்கு 10 ஆயிரத்து 120 கோடி ரூபாய் கிடைக்கிறது. இப்படி மக்களின் பார்வையை பணமாக மாற்றும் மந்திரக் கோல் தான் ஐ.பி.எல்.
இதில், ஒரு அணியின் உரிமையாளர் ஒரு வீரரை திட்டிவிட்டார் என அதனை விவாதமாக மாற்றி, நேரத்தை விரையமாக்கி வரும் இளைஞர்களின் நிலை தான் பரிதாபம்.