“தனி பாலஸ்தீன் நாட்டுக்கு ஆதரவு” கமலா ஹாரிஸ்!
திங்கட்கிழமை ஜோ பிடனை, இஸ்ரேல் பிரதமர் சந்திக்க இருந்தார். அதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக, தனது விலகலை ஜோபிடன் அறிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருந்து ஜோ பிடன் விலகியுள்ளார். ஆனால் அவர் அதிபர் பதவியில் இருந்தும் விலக வேண்டும் என எதிர்கட்சியான குடியரசு கட்சி வலியுறுத்தி வருகிறது.
வயது முதிர்வின் காரணமாக நாட்டை வழிநடத்தும் திறனை அவர் இழந்து விட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் கமலா ஹாரிசின் காசா போர் நிலைப்பாடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மைக்காலமாக 2 முறை இஸ்ரேல் குறித்து கடுமையான கருத்துக்களை கமலா ஹாரிஸ் முன்வைத்துள்ளார். காசாவில் நிலவும் மனிதாபிமானமற்ற சூழல், எங்களை செயல்படத் தூண்டுகிறது எனத் தெரிவித்தார். அங்கு மனிதநேய உதவிகள் சென்று சேராமல் தடுத்து வரும் இஸ்ரேல், அதற்கு கூறும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல எனத் தெரிவித்தார்.
இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னைகளுக்கு இரு நாடுகள் கொள்கை தான் தீர்வு என்றும் தனி பாலஸ்தீன நாடு உருவாகுவதை ஆதரிப்பதாக தெரிவித்தார். அதே போல் ரபா நகரம் மீதான தாக்குதலுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்த அவர், கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் எனக் குறிப்பிட்டார்.
எனினும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலை கண்மூடித்தமான ஆதரித்து வந்தது போல், கமலா ஹாரிசும் தொடர்ந்து ஆதரிப்பார் என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். காசாவில் போர்நிறுத்தம் கொண்டு வர ஜோபிடன் ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். அதனை ஹமாஸ் ஏற்றுக் கொண்ட நிலையில், இஸ்ரேல் ஏற்காமல், தாக்குதலை தீவிரப்படுத்தியது.
இந்த நிலையில், திங்கட்கிழமை ஜோ பிடனை, இஸ்ரேல் பிரதமர் சந்திக்க இருந்தார். அதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக, தனது விலகலை ஜோபிடன் அறிவித்துள்ளார். அதே நேரம் எஞ்சிய காலம் அதிபர் பதவியில் நீடிக்க உள்ளதாகவும், இஸ்ரேல் பிரதமர் உடனான சந்திப்பு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.