அதிகமான காங்கிரஸ் தலைவர்கள் கட்சி தாவியதால் தான் கட்சித் தாவல் தடை சட்டமே கொண்டு வரப்பட்டது – ஒரு விநோத வரலாறு!

கர்நாடகா, மத்திய பிரதேசம், கோவா போன்ற பல மாநிலங்களில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜகவிற்கு தாவி வருவது அண்மைக்காலத்தில் வழக்கமான செய்தியாக மாறிவிட்டது.தற்போது பாஜக வலுவாக உள்ளதால், காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவி வருவதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் காங்கிரஸ் வலுவாக இருந்த காலக்கட்டத்திலேயே அதன் எம்பி எம்எல்ஏக்கள் அதிகளவில் கட்சி தாவினர். இதனால் தான் கட்சித் தாவல் தடை சட்டத்தை 1985ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி கொண்டு வந்தார்.
1967 முதல் 1971 வரையிலான சுமார் 5 ஆண்டுகளில் மட்டும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களில் 2000 பேர் கட்சி தாவியுள்ளனர். இது ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 50 சதவீதம் ஆகும். இதில் பெரும்பாலானவர்கள் காங்கிரசை சேர்ந்தவர்கள்.இதில் மிக முக்கியமானது அரியானா மாநிலத்தில் 1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தல். இதில் மொத்தம் உள்ள 81 சட்டமன்ற இடங்களில் 48 இடங்களை பிடித்து காங்கிரஸ் வெற்றி பெற்றது. பக்வத் தயாள் காங்கிரஸ் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். வலுவான எதிர்கட்சிகளே இல்லை. காங்கிரசில் இருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்ட காங்கிரஸ்அதிருப்தி வேட்பாளர்கள் மட்டும் சுமார் 16 பேர் வெற்றி பெற்றிருந்தனர். மூன்றாம் இடம் பிடித்த கட்சி பாஜகவின் தாய் அமைப்பான பாரதிய ஜன சங்கம், ஆனால் இந்தக் கட்சி வெறும் 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. எனவே மாநிலம் முழுவதும் காங்கிரஸ் அவ்வளவு பலமாக இருந்தும் அந்த ஆட்சி உட்கட்சி பூசல் காரணமாக நீடிக்கவில்லை.
பிரபல காங்கிரஸ் தலைவரான பிரேந்தர் சிங் என்பவர் தனக்கு அதிகமான எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறி, 12 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவுடன் அரியானா காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற, காங்கிரஸ் அதிருப்தியாளாளர்கள் 16 பேர் நவீன் அரியானா கட்சி என்ற புதிய கட்சியை தோற்றுவித்து, பிரேந்தர் சிங்கை ஆதரித்தனர். பாரதிய ஜனசங்கமும், காங்கிரசை ஆதரித்தது. எதிர்கட்சிகளின் பலம் 48 ஆக உயர்ந்து, பிரேந்தர் சிங் முதலமைச்சர் ஆனார்.
ஆனால் நாள்தோறும் காங்கிரசில் இருந்து எதிர்கட்சிகளுக்கும், எதிர்கட்சிகளில் இருந்து காங்கிரசுக்கும் தாவியவர்கள் எண்ணிக்கை தினசரி நிகழ்வுகளாக இருந்தது. இதில், ஹிராநந்த் ஆர்யா என்பவர் ஒரே நாளில் 7 முறை கட்சி மாறினார்.
கயா லால் என்பவர் ஒரே நாளில் 3 முறை கட்சி மாறினார். இதனை நாடாளுமன்றத்தில் விமர்சித்த அப்போதைய உள்துறை அமைச்சர் ஆயா ராம் கயா ராம் என விமர்சித்தார். அதாவது ராமர் வருவார், ராமர் செல்வார் என்பது அதன் பொருள். இப்போதும் அடிக்கடி கட்சி மாறுபவர்களை இந்த வார்த்தையை கொண்டு கிண்டல் செய்வது வழக்கம்.
எனவே கட்சித் தாவலை முடிவுக்கு கொண்டு வர, பிரேந்தர் சிங் அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தான் 1985ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி கட்சித் தாவல் தடைத் சட்டத்தை கொண்டு வந்தார்.