வான்பாதுகாப்பு அமைப்புகளை வாங்கிக் குவிப்பதாக தகவல்!

இஸ்ரேலின் தொடர் விமானத் தாக்குதல் எதிரொலியாக, ஐயன்டோம் போன்ற வான் பாதுகாப்பு கருவிகளை ஹிஸ்புல்லா வாங்கிக் குவித்து வருவதாக ஆக்கிரமிப்பு நாட்டின் ஊடகமான சேனல் 12 ஆவணப்படம் வெளியிட்டுள்ளது.ஈரான், ரஷ்யா நாடுகளின் உதவி மற்றும் பயிற்சி ஹிஸ்புல்லாவுக்கு வழங்கப்படுவதாக அந்த ஊடகம் கூறியுள்ளது. வான் பாதுகாப்பு கருவிகள், சிரியா வழியாகவும், கடல் வழியாகவும் லெபனானுக்கு கொண்டு செல்லப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
தோளில் சுமந்து கொண்டு தாக்கும் சிறிய ரக வான் பாதுகாப்பு ஆயுதங்கள் முதல், ஐயன் டோமுக்கு நிகரான மிகப்பெரும் பாதுகாப்பு அமைப்புகள் வரை ஹிஸ்புல்லா பெற்று வருவதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. இதனால் இஸ்ரேல் போர் விமானங்கள் சுதந்திரமாக சென்று தாக்கி வந்த நிலை மாற்றப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் கூறியுள்ளது.
இஸ்ரேலின் 5 ஆள் இல்லா விமானங்களை ஹிஸ்புல்லா சுட்டு வீழ்த்தியதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், 7 விமானங்களை வீழ்த்தியுள்ளதாக ஹிஸ்புல்லா கூறி வருகிறது. இஸ்ரேலின் ஒரு ஹேர்மஸ் 900 யுஏவி ஆள் இல்லா விமானத்தின் இந்திய மதிப்பு 84 கோடி ரூபாய் ஆகும்.இதுமட்டுமின்றி அமெரிக்காவின் F16 போர் விமானங்களை ஹிஸ்புல்லா தனது ஆயுதம் மூலம் பலமுறை விரட்டியடித்துள்ளது. இதுவரை சுட்டு வீழ்த்தப்படவில்லை. ராடார் தொழில்நுட்பத்தையும் ஹிஸ்புல்லா கொண்டுள்ளதால், இந்த வான் பாதுகாப்பு அமைப்பு சாத்தியமாகியுள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.