290வது நாள் – ஒரே நாளில் 64 பாலஸ்தீனியர்கள் பலி!
நுசைரத் அகதிகள் முகாம் மீது கடந்த ஒரு வாரத்தில் நடத்தப்பட் 63 தாக்குதல்களில் 91 பலி, 250 பேர் காயம்

காசா மீது 290வது நாளாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 38 ஆயிரத்து 983 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 89,727 பேர் காயம் அடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் 64 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 105 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நுசைரத் அகதிகள் முகாம் மீது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 63 தாக்குதல்களை ஆக்கிரமிப்பு ராணுவம் நடத்தியுள்ளது. இதில் 91 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதோடு, 250 பேர் காயம் அடைந்துள்ளனர்.
சாக்கடை அமைப்புகளை இஸ்ரேல் திட்டமிட்டு தகர்த்துள்ளதால், போலியோ நோய் பரவி வருகிறது. இஸ்ரேல் தங்களது படையினருக்கு போலியோ எதிர்ப்பு மருந்துகளை செலுத்தியுள்ளதாக கூறியுள்ளது. கட்டிட இடிபாடுகள், குப்பைகள், சாக்கடை நீர் என சாலைகள் மக்கள் பயன்படுத்த முடியாததாக மாறியுள்ளன.
திங்கட்கிழமையும், கான் யூனிசில் 2 வீடுகள் மீது இஸ்ரேல் குண்டு வீசியுள்ளது. இதில் ஒரு பெண், ஒரு குழந்தை என 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 11 பேர் காயம் அடைந்துள்ளதாக Wafa news agency செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் காசா சிட்டியில் யுனிவர்சிட்டி கல்லூரி மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசியதில், அந்தக் கட்டிடம் தீப்பற்றி எரிந்துள்ளது.
இதே போல், காசாசிட்டியின் Tuffah பகுதியில் Batash குடும்பத்தினர் மீது குண்டு வீசியதில் 3 பேர் கொல்லப்பட்டதோடு, பலர் காயம் அடைந்துள்ளனர். கான் யூனிஸ் நகரில் Jadallah குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தெற்கு காசாவின் al-Raqab குடும்பத்தினரை குறிவைத்து தாக்கியதில் ஒரு சிறுமி கொல்லப்பட்டதோடு, 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.