இஸ்ரேல் தரைப்படை தலைமை ராணுவ தளபதி ராஜினாமா!

தரைப்படை தலைமை ராணுவ தளபதி ராஜினாமா!
கடும் நெருக்கடியில் இஸ்ரேல் அரசியல்…
பணய கைதிகள் 6 பேர் காசாவில் கொல்லப்பட்ட சம்பவம் இஸ்ரேலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இஸ்ரேல் விமானப்படையின் குண்டு வீச்சில் அவர்கள் கொல்லப்பட்டதாகவும், நெதன்யாக, பணய கைதிகளை உயிருடன் மீட்க விரும்பவில்லை என ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில் ஹமாசுடன் உடனடியாக அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும், நெதன்யாகு ராஜினாமா செய்ய வேண்டும், உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கட்கிழமை 5 லட்சம் இஸ்ரேலியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறுபுறம் காசா அமைதி உடன்படிக்கையில் நெதன்யாகு உடனடியாக கையெழுத்திட வேண்டும் என இஸ்ரேல் எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் தரைப்படையின் தலைமை தளபதி மேஜர் ஜெனரல் தாமிர் யாடை என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து 3 மாதங்கள் பணியில் இருக்குமாறும், புதிய தளபதி நியமனம் செய்யப்பட்ட பிறகு, பதவி விலகலாம் என ராணுவ அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கு முன்பும் பல ராணுவ தளபதிகள், உளவுத்துறை அதிகாரிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். ரிசர்வ் படையைச் சேர்ந்த பலர் தொடர்ந்து, ராணுவத்தில் இருந்து விலகி வருகின்றனர்.
ஹமாசை முழுமையாக ஒழிப்பது, பணய கைதிகளை உயிருடன் மீட்பது ஆகிய முக்கிய இலக்குகளுடன், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு போரை தொடங்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் இன்று வரை அதில் வெற்றிபெறவில்லை. தற்போது, காசாவில் 50 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட நிலையில், அதுகுறித்த பின்விளைவுகள் இஸ்ரேலை பின்தொடர ஆரம்பித்துள்ளன.
இன்னும் ஓரிரு வாரத்திற்குள், பெஞ்சமின் நெதன்யாகு, ராணுவ தலைமை தளபதிகள், ராணுவ அமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிரான கைது வாரண்டுகளை சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் பிறப்பிக்க உள்ளதாக ஆக்கிரமிப்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
=============