நூலிழையில் தப்பிய இஸ்ரேல் போர் விமானங்கள்! விமான எதிர்ப்பு ஏவுகணையை பயன்படுத்திய ஹிஸ்புல்லா!

ஹிஸ்புல்லா ஏவிய விமான எதிர்ப்பு ஏவுகணைகள்…
இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் விரட்டியடிப்பு…
அடுத்தக் கட்டத்திற்கு சென்ற லெபனான் போராளிக்குழு…
வளர்ந்த நாடுகளிடம் மட்டுமே உள்ள விமான எதிர்ப்பு ஆயுதங்களை ஹிஸ்புல்லா அமைப்பும் பெற்றிருப்பது, அண்மை நிகழ்வின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. லெபனானின் தெற்குபகுதி மீது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசி கிராம மக்களை கொன்று வருகின்றன.
இதற்கு பதிலடியாக அந்தப் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல் உள்ளிட்ட பல தாக்குதல்களை கடந்த 10 மாதங்களாக நடத்தி வருகிறது.இந்த நிலையில், இஸ்ரேலின் போர் விமானங்களை இரண்டு முறை ஹிஸ்புல்லா விரட்டியடித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் விமானங்களை நோக்கி, தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை ஹிஸ்புல்லா ஏவியுள்ளது. இதனால் தாக்குதல் நடத்த வந்த 2 ஆக்கிரமிப்பு விமானங்கள், இஸ்ரேலுக்குள் தப்பி ஓடியுள்ளன.
கடந்த ஜுன் மாதமும், இதே போன்ற ஒரு நிகழ்வு அரங்கேறியது. இந்த நிலையில், தற்போது, மீண்டும் விமான எதிர்ப்பு ஏவுகணை ஹிஸ்புல்லா பயன்படுத்தி இருப்பதன் மூலம் இஸ்ரேலின் வான் வழித் தாக்குதலுக்கு விரைவில் முடிவு கட்டப்படும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தெரிவித்துள்ள ராணுவ பார்வையாளர்கள், ஹிஸ்புல்லாவின் ஏவுகணைகள், இஸ்ரேல் போர் விமானங்களை தாக்காமல் இருந்தாலும் கூட, இனி லெபனான் வான் எல்லைக்குள் நெருங்க இஸ்ரேல் தயக்கம் காட்டும் எனக் கூறியுள்ளனர்.
இது தாக்குவது என்ற நோக்கத்தைவிட, தடுப்பது என்ற நோக்கத்தை கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
====