உலகம்

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு வீரர் சுட்டுக்கொலை! ஹமாஸ் நடவடிக்கை!

காசா மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையினரின் தாக்குதல் 311 வது நாளை எட்டியுள்ளது.அண்மையில் பள்ளிக்கூடத்தில் அதிகாலை தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்கள் மீது ஆக்கிரமிப்பு ராணுவம் வீசிய ராக்கெட்டுகள் மூலம் சுமார் 90 பேர் கொல்லப்பட்டனர்.

அவர்கள் உடல்கள் அடையாளம் காண முடியாதவாறு சிதைந்து போய் இருந்தன.இதுவரை சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் 24 ஆயிரம் பேர் குழந்தைகள்.சுமார் ஒரு லட்சம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மன்றம் சர்வதேச நீதிமன்றம் என எந்த ஒரு சர்வதேச அமைப்பும் இஸ்ரேலை தடுத்து நிறுத்த முடியாதவாறு கையாளாகாத நிலையில் உள்ளன.அதேநேரம் 300க்கும் மேற்பட்ட நாட்களாக இஸ்ரேல் படைகளை எதிர்த்து பாலஸ்தீனிய போராளி குழுக்கள் தொடர்ந்து எதிர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 310 ஆவது நாளில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை காசாவின் பல பகுதிகளிலும் வீரத்தோடு எதிர்கொண்டு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக பாலஸ்தீன குழுக்கள் தெரிவித்துள்ளன.ரபா நகரில் இஸ்ரேல் படை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு வீரர்கள் தங்கி இருந்த ஒரு கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இஸ்ரேல் தரைப்படையை குறிவைத்து மற்றொரு இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இஸ்ரேல் கவச வாகனத்தின் மீது ஒரு இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற தங்களது பல தாக்குதல்களின் மூலம் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையினர் இடையே கடும் உயிரிழப்பு மற்றும் காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஹமாசின் ராணுவ பிரிவான அல் கஸ்ஸாம் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை தூக்கிச் செல்வதற்காக ஆக்கிரமிப்பு ஹெலிகாப்டர்கள் அப்பகுதிக்கு வந்ததாகவும் ஹமாஸ் படை குறிப்பிட்டுள்ளது. இதேபோல் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை வீரர் ஒருவரை குறிவைத்து ஸ்னைப்பர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஒரு ஆக்கிரமிப்பு வீரர் சுருண்டு விழும் காட்சிகள் வெளியாகி உள்ளன.இதேபோல் கான் யூனுஸ் மற்றும் ரபா சுற்று வட்டாரப் பகுதிகளில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை குறிவைத்து பல்வேறு ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக காசாவின் போராளி குழுக்கள் பட்டியல் வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளுக்கு போதிய ஆயுதங்கள் உள்ள நிலையிலும் அமெரிக்கா பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து தங்கு தடை இன்றி தொடர்ந்து பேரழிவு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன அதே நேரம் காசா போராளி குழுக்கள் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக முற்றிலும் முற்றுகையிடப்பட்டுள்ள சூழலில் உணவு குடிநீர் மருத்துவ வசதிகள் போதிய அளவில் இல்லாத நிலையிலும் இஸ்ரேல் படைகளை எதிர்த்து பத்து மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து போரிட்டு வருவது பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பல்வேறு தாக்குதல்களை நடத்தியதாக காசா போராளி குழுக்கள் பட்டியலிட்டுள்ள நிலையில் தங்கள் தரப்பில் ஒரே ஒரு வீரர் உயிரிழந்திருப்பதாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் தெரிவித்துள்ளன.இஸ்ரேல் தனது தரப்பு சேதங்களை தொடர்ந்து மறைத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button