உலகம்

காசா பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 30 பேர் பலி

காசா பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதல் நடத்தி, போர்க்குற்றம்…
பெண்கள், குழந்தைகள் என 30க்கும் மேற்பட்டோர் பலி…
ஜெர்மனி, பிரான்சு உள்ளிட்ட உலக நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம்…

காசா மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் தாக்குதல் 278வது நாளை எட்டியுள்ளது. கத்தாரில் ஒரு பக்கம் பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், மறுபுறம் அதனை சீர்குலைக்கும் விதமாக இஸ்ரேல் தனது கொடூரத் தாக்குதல்களை அதிகரித்து வருகிறது.

4 நாட்களில் 4 பள்ளிக்கூடங்கள் தாக்கப்பட்டுள்ளன. அதில் தஞ்சடைந்திருந்த 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். காசா சிட்டியில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் உத்தரவிட்டுள்ளன.

கான் யூனிசில் பள்ளிக் கூடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அதில் தங்கிருந்த, பெண்கள், குழந்தைகள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர். 53 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வடக்கு காசாவில் 3 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.
இதுவரை 38,295 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 88,241 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கான்யூனிஸ் பள்ளிக் கூடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை உலக நாடுகள் கண்டித்துள்ளன.

இதுகுறித்து ஜெர்மனியின் தேசிய வெளியுறவுத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, தெற்கு காசாவில் பொதுமக்கள் தங்கிருந்த பள்ளிக்கூடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

இதுகுறித்து விரைந்து விசாரணை நடத்தப்பட வேண்டும். தாக்குதல்களில் குழந்தைகள் பாதிக்காதவாறு இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து பள்ளிக் கூடங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், காசாவில் பள்ளிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button