காசா சிவில் நிர்வாகத்தில் ஹமாசுக்கு பங்கு – டிரம்பின் முடிவால் அதிர்ச்சியில் இஸ்ரேல்!

காசாவில் நிரந்தர அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்க கைதி ஈடன் அலெக்சாண்டரின் விடுதலை முக்கியத்துவம் வாய்ந்தது என ஹமாஸ் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான கலீல் அல் ஹய்யா தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிப்பு போர் நிறுத்தப்படும், எல்லை நுழைவு வாயில்கள் திறக்கப்படும், மனிதநேய உதவிகள் மீண்டும் தொடங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் அமெரிக்க கைதி அலெக்சாண்டர் விடுவிக்கப்பட உள்ளதாக கலீல் அல் ஹய்யா தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், விரிவான அரசியல் தீர்வு காண்பதற்கும் ஹமாஸ் முழு வீச்சில் தயாராக உள்ளது.
பரஸ்பர கைதிகள் பரிமாற்றம், சுதந்திர தொழில்முறை அமைப்பின் கீழ் காசாவை நிர்வாகம் செய்தல், நீடித்த அமைதி, நீடித்த நிலைத்தன்மை, முற்றுகையை முடிவுக்கு கொண்டு வருதல் ஆகியவை தான் தற்போதைய ஹமாசின் குறிக்கோள் என கலீல் அல் ஹய்யா தெரிவித்துள்ளார்.
காசா விவகாரத்தில், இஸ்ரேல் மற்றும் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் இடையே பல கொள்கை முரண்பாடுகள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. காசாவை முழுமையாக ஆக்கிரமிப்பதில் இஸ்ரேல் குறியாக உள்ளது. அதே நேரம் டொனால்டு டிரம்ப் நிர்வாகம், அமெரிக்க தலையீடு அடிப்படையிலான சுதந்திர காசா நிர்வாகத்தை நோக்கி, தனது கொள்கைகளை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
காசா போலீஸ் துறையை, மேற்குகரையுடன் இணைத்து நிர்வகித்தல், ஹமாசுக்கு சிவில் நிர்வாகத்தில் பங்கு கொடுத்தல் ஆகியவை டிரம்பின் திட்டங்களில் ஒன்றாக உள்ளதாக இஸ்ரேல் பத்திரிக்கையான to Israel Hayom குறிப்பிட்டுள்ளது. இந்த திட்டம் இஸ்ரேலிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது வலைதளத்தில் டொனால்டு டிரம்ப் குறிப்பிடும் போது, நான் சொல்லப்போகும் அடுத்த தகவல், மிகவும் முக்கியமானது, தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அதனை அனைவரும் அனுபவியுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
அலெக்சாண்டர் விடுதலையை ஹமாஸ் அறிவிப்பதற்கு முன்பே, அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப், அலெக்சாண்டரின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்கா – ஹமாஸ் இடையேயான பேச்சுவார்த்தை, ஆழமான பகுதியை நோக்கி சென்று வருவதாக கூறப்படுகிறது.
அலெக்சாண்டர் விடுதலை விவகாரத்தில், கத்தார், எகிப்து, துருக்கி நாடுகளின் மத்தியஸ்தத்திற்கு, ஹமாசின் கலீல் அல் ஹய்யா நன்றி தெரிவித்துள்ளார்.
====