அவசரமாக துருக்கியில் தரையிங்கிய இஸ்ரேல் விமானம் – எரிபொருள் தர மறுத்த துருக்கி!

மருத்துவ அவசரம் என்று கூறி துருக்கியில் தரையிறங்கிய இஸ்ரேல் விமானம்…
எரிபொருள் தர மறுத்து, எதிர்ப்பை பதிவு செய்த துருக்கி…
கிரீஸ் நாட்டின் வர்சாவில் இருந்து, இஸ்ரேலின் டெல் அவிவ்விற்கு புறப்பட்ட இஸ்ரேல் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, துருக்கியில் விமானத்தை தரையிறக்க விமானி முடிவு செய்துள்ளார்.
இதற்காக வானில் இருந்தவாறே, துருக்கியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அன்டலியா என்ற விமான நிலையத்தில் இஸ்ரேல் விமானம் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே, விமானத்தில் இருந்து யாரும் இறங்க வேண்டாம் என துருக்கி விமான நிலைய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனையடுத்து, விமானத்திற்குள் இருந்தவர்கள் தொடர்ந்து, அங்கேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், ஏ.சி. அணையாமல் இருக்க, தொடர்ந்து, விமானத்தை ஆஃப் செய்யாமல் இருந்துள்ளார் இஸ்ரேல் விமானி. ஆனால் மிகுந்த நேரம் ஆகியும், துருக்கி அதிகாரிகள், பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முன்வரவில்லை.
இதனையடுத்து, அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல இஸ்ரேல் விமானி முடிவு செய்த நிலையில், சில மணி நேரம், விமானம் இயங்கி இருந்ததால், இஸ்ரேல் செல்வதற்கு போதிய எரிபொருள் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, எரிபொருளாவது, கொடுங்கள் என துருக்கி அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது.
எரிபொருளும் தொடர்ந்து கிடைக்காததால், அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற இஸ்ரேல் விமானம், அருகே இருந்த கிரீஸ் நாட்டில் தரையிறங்கி, அங்கு பாதிக்கப்பட்ட நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள துருக்கி அதிகாரிகள், மனிதாபிமான அடிப்படையில், இஸ்ரேல் விமானம் தரையிறங்க அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்கள் கேட்ட உதவி பரிசீலனையில் இருந்த நிலையில், அதற்கு முன்பாக அந்த விமானம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டதாக கூறியுள்ளனர்.
எனினும் காசா மீதான இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்கள், துருக்கி மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதால் தான், இஸ்ரேல் விமானத்துக்கு துருக்கி உதவவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக காயம் அடைந்த காசா மக்கள் மருந்து இல்லாமலும், எரிபொருள் இல்லாமலும் கடும் அவதியடைந்து வரும் நிலையில், அதனை உணர்த்துவதற்காக துருக்கி, வேண்டுமென்றே, உதவி செய்யாமல் தாமதப்படுத்தி இருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த விவகாரம் உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
===