5 கர்னல்கள் உள்ளிட்ட 100க்கணக்கான உயர் அதிகாரிகளை இழந்த இஸ்ரேல்! 668 பேரின் பட்டியல் வெளியீடு!

கர்னல் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரி முதல் கமாண்டர்கள் வரை…
இஸ்ரேல் ராணுவத்தை நடுநடுக்க வைத்த ஹமாசின் வேட்டை…
668 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்ட இஸ்ரேல் ராணுவம்…
காசா மீது 266வது நாளாக தாக்குதல் நடத்தி, சுமார் 38 ஆயிரம் பாலஸ்தீனியர்களை கொன்று குவித்துள்ளது இஸ்ரேல். சுமார் 1 லட்சம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் ஊனமடைந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 100 குழந்தைகள் கொல்லப்படுவதாக, அல்லது காயம் அடைவதாக ஐக்கிய நாடுகள் மன்றம் வேதனை தெரிவித்துள்ளது. காசா துண்டு நிலத்தையே மனிதர் வாழ தகுதியற்ற நிலமாக இஸ்ரேல் மாற்றியுள்ளது.
அப்படி இருந்தும், இன்னும் ஹமாஸ் அமைப்பை முழுமையாக இஸ்ரேலால் அழித்தொழிக்க முடியவில்லை. சிறு படையாக இருந்தாலும், ஈரான் உள்ளிட்ட நாடுகளின் தொழில்முறை ராணுவத்தினரிடம் பெற்ற பயிற்சி, ஆயுதங்கள், யுக்தி, விடுதலை வேட்கை என ஒருங்கே பெற்ற ஹமாஸ், மத்திய கிழக்கின் ராணுவ வல்லரசு என கூறப்படும் இஸ்ரேல் படையின் கண்ணில் மண்ணை தூவி வருகிறது.
ஹமாசால் கொல்லப்பட்ட ராணுவ உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரையிலான பட்டியலை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. இதில் 5 பேர் ராணுவத்தின் உயர் அந்தஸ்தில் உள்ள கர்னல்கள். இதே போல் லெப்டினென்ட் கர்னல்கள், கமாண்டர்கள், மேஜர்கள் என மொத்தம் 668 பேரை ஹமாசுக்கு எதிரான போரில் இழந்துள்ளதாக இஸ்ரேல் படைத் தெரிவித்துள்ளது.
இதில் 315 பேர் தற்போதைய தரைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள். 300க்கும் மேற்பட்டோர் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலின் போது கொல்லப்பட்டவர்கள் ஆவர்.
===