தயார் நிலையில் பதுங்கு குழிகள் – பதற்றத்தில் இஸ்ரேல்!

எதிர் தாக்குதல் அச்சத்தால் பதற்றமான நிலையில் இஸ்ரேல்…
ஆக்கிரமிப்பு அரசியல் தலைவர்களின் இருப்பிடங்களில் பதுங்கு குழிகள் தயார்…
ஒரே நாளில் 3 முக்கிய தலைவர்களை ஆக்கிரமிப்பு இஸ்ரேல் படைகள் கொன்றுள்ள நிலையில், மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மட்டுமின்றி, ஹிஸ்புல்லா ஆயுதப் படைகளின் தலைவர் ஃபவுத் சுக்கூர், ஈரான் ஆலோசகர் மிலாட் பிடி ஆகியோரும் ஜுலை 30ஆம் தேதி இரவு கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களது உடல்கள் பல மணி நேரங்களுக்கு பிறகே, கண்டுபிடிக்கப்பட்டு, அடையாளம் காணப்பட்டன. இதனால் ஹிஸ்புல்லா அமைப்பு தனது வழக்கமான தாக்குதல்களை ஜுலை 31ஆம் தேதி நடத்தவில்லை. இதே போல ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளில் அந்த அமைப்பும் இறங்கியுள்ளது.
ஏமன் ஹவுத்திப் படைகளும், அடுத்த கட்ட நடவடிக்கையை ஒருங்கிணைந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதனால் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் உடனடி பதிலடியில் இருந்து தப்பியுள்ளது. அதே நேரம் ஒரே நாளில் 3 முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதை, ஆக்கிரமிப்பு இஸ்ரேல் பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.
பொது இடங்களில் இனிப்புகள் வழங்குவது, சூப்பர் மார்க்கெட்டில் இலவசமாக சாக்லெட் வினியோகம் செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே நேரம் மற்றொரு பக்கம் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ராணுவம் மற்றும் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் கடும் பதற்றத்தில் உள்ளனர்.
பிரதமர், அமைச்சர்கள், தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதுங்குகுழிகள் தயார் நிலையில் உள்ள இடங்களுக்கு மட்டுமே தலைவர்கள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள ஆக்கிரமிப்பு வான்படை, போர் விமானங்கள் எந்த சூழலையும் சந்திக்கும் வகையில் தயார் நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளன.
கடினமான காலங்கள் வர உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் மற்றும் அதிபர் ஒரே கருத்தை கூறியுள்ளனர்.
=====