இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடக்கம்!

காசா மீதான தனது தாக்குதலை 272வது நாளாக இஸ்ரேல் நடத்தி வருகிறது. புதன்கிழமை மட்டும் 3 இடங்களில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலைகளில் 28 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், 125 பேர் படுகாயம் அடைந்தனர்.
வியாழக்கிழமை காலை முதல் நண்பகல் வரை சுமார் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சில பகுதிகளில் 5 நாட்களாக பாலஸ்தீனிய பொதுமக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். 5 நாட்களாக அவர்கள் உணவு, குடிநீர் இன்றி, இஸ்ரேலின் குண்டு வீச்சுகளுக்கு மத்தியில் சிக்கியுள்ளனர். அவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை.
திடீரென இஸ்ரேல் வெளியிட்ட வெளியேற்ற அறிவிப்பு மூலம் சுமார் 18 லட்சம் மக்கள் மீண்டும் உள்நாட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்ட இடங்களிலும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் திடீர் தாக்குதல்களை நடத்தி, பெண்கள், குழந்தைகளை கொன்று வருகின்றனர். அதே நேரம் பாலஸ்தீன் போராளிக்குழுக்களும், தங்களது தாக்குதல்களை முழு வீச்சில் நடத்தி வருகின்றன. இதில் பல இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் உடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. எகிப்து, கத்தார் நாட்டைச் சேர்ந்த அமைதி தூதுவர்கள் மூலம் புதிய ஒப்பந்தம் ஒன்றை ஹமாஸ், இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது.
ஹமாஸ் அனுப்பியுள்ள ஒப்பந்தத்தில், காசாவில் இருந்து இஸ்ரேல் நிரந்தரமாக வெளியேற வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களை அவர்களது சொந்த இடத்தில் குடியேற அனுமதிக்க வேண்டும், நிரந்தர போர் நிறுத்தம் ஆகிய சரத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் பரிசீலித்து வருவதாக, இதுகுறித்து விரைவில் தனது முடிவை நெதன்யாகு வெளியிடுவார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே, இதுகுறித்து எகிப்து, கத்தார், துருக்கி உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அவர்கள் இஸ்ரேலின் மொசாத் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் இதற்கு முன்பும் இதுபோன்ற பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில், தங்களின் துயர் துடைக்கப்படவில்லை என்பதால், இந்த பேச்சுவார்த்தை திருப்பு முனையாக அமையும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இல்லை என பாலஸ்தீனியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
====