10 மணி நேரத்தில் 57 பேர் பலி, 172 பேர் படுகாயம்! தீராத காசா துயரம்!

திங்கட்கிழமை கான் யூனிஸ் பகுதியில் உள்ள 4 லட்சம் பேரை திடீரென வெளியேற உத்தரவிட்ட இஸ்ரேல், சில மணி நேரங்களில் எதிர்பாரா தாக்குதலை தொடங்கியது.
கடந்த சில நாட்களில் நடத்தப்பட்ட மிகப்பெரும் இனப்படுகொலையாக இது பார்க்கப்படுகிறது. வானில் இருந்து அடுத்தடுத்து குண்டுகளை வீசியதால், மக்கள் எங்கு செல்வது என தெரியாமல் தவித்தனர். சுமார் 1200 பேர் காசா சுகாதாரத்துறைக்கு அவசர அழைப்புகளை விடுத்துள்ளனர்.
10 மணி நேரம் நீடித்த இந்தத் தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 57 பேர் கொல்லப்பட்டனர். 172 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து காசாவாசியான அகமது சம்மோர் கூறியதாவது, நாங்கள் சோர்ந்து விட்டோம். காசாவில் நாங்கள் துவண்டு விட்டோம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் எங்கள் குழந்தைகள் வீர மரணத்தை சந்திக்கின்றனர்.
இது எனது குழந்தையின் ரத்தம். இன்னும் இது காயவில்லை. இந்த இடத்தை காலி செய்யச் சொல்லி யாரும் சொல்லவில்லை. திடீரென 4 அடுக்குமாடி குண்டு வீச்சில் சரிந்து விழுந்தது. இவ்வாறு தெரிவித்தார்.
காசா மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் தாக்குதல் திங்கட்கிழமை அன்று 290வது நாளை எட்டியது.
தற்போது வரை கொல்லப்பட்ட காசா மக்களின் எண்ணிக்கை 39,006 ஐ எட்டியுள்ளது. 89,818 படுகாயம் அடைந்துள்ளனர்.
உலக நாடுகள் தொடர்ந்து இந்தப் போரில் மக்கள் சாவதை வேடிக்கை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
====