இப்படியும் ஒரு கொடூரமா? காசாவில் உதவிப் பொருட்களை பெற வந்த 30 பேர் பலி!

காசாவில் உதவிப் பொருட்களை பெற காத்திருந்த மக்கள் மீது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 150 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உதவி பெறக் காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மொத்தம் 47 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 255 பேர் காயம் அடைந்துள்ளனர்.இது நிவாரண விநியோகம் அல்ல, பொதுமக்களை கொல்வதற்கு வைக்கப்பட்ட கன்னிவெடி என்று ஹமாசின் காசா உள்ளாட்சி நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் அனுப்பி வைக்கும் உதவிப் பொருட்களை ஹமாசின் காசா உள்ளாட்சி நிர்வாகம் பெற்று, பொதுமக்களுக்கு வினியோகித்து வந்தது. இதனால், தொடர்ந்து ஹமாசின் கட்டுப்பாட்டில் காசா இருப்பதாக நினைத்து, வினியோகத்தை தாங்களே செய்கிறோம் என இஸ்ரேல் கூறியது. இதற்காக ஒரு அமைப்பை இஸ்ரேல் உருவாக்கியது. அந்த அமைப்பினர் தான் தற்போது, விநியோகம் செய்து வருகின்றனர்.முதல் நாளிலேயே கூட்டத்தை சமாளிக்க முடியாமல் அந்த அமைப்பினர், அங்கிருந்து தப்பி ஓடினர். கூட்டத்தை நோக்கி இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை துப்பாக்கிச்சூடு நடத்தியது. பலர் இதில் காயம் அடைந்தனர். அடுத்தடுத்த நாட்களில் உதவி பெற வருபவர்களை நோக்கிய தாக்குதல்கள் அதிகரித்து, தற்போது, பெரும் ரத்த ஆற்றை இஸ்ரேல் ஓட்டியுள்ளது.