ஹிஸ்புல்லாவுக்கு ஈரானின் உறுதியான ஆதரவு தொடரும் – புதிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் திட்டவட்டம்!

ஹிஸ்புல்லா தலைவரை தொடர்பு கொண்ட புதிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன்…
இஸ்ரேலுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை தங்குதடையின்றி தொடருமாறு வேண்டுகோள்…
ஈரானின் ஆதரவு எப்போதும் போராளிகளுக்கு இருக்கும் என உறுதி…
ஈரான் முன்னாள் அதிபர் இப்ராஹிம் ரைசி, எதிர்பாரா விபத்தில் காலமானதை தொடர்ந்து, புதிய அதிபராக மசூத் பெசஸ்கியான் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சமூக சீர்திருத்தவாதியாக கருதப்படுகிறார். கடும்போக்கு கொண்ட வேட்பாளர் கலீல் என்பவரை தோற்கடித்து அதிபராகியுள்ளார்.
இதய அறுவை சிகிச்சை மருத்துவரான பெசஸ்கியான், ஈரானில் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் கட்டாய ஹிஜாப் சட்டத்தில் தளர்வு கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார். சர்வதேச அரசியலை பொருத்தவரை, அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், இஸ்ரேலைத் தவிர என தனது முதல் உரையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார்.
சுப்ரீம் தலைவரின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டு, ஆட்சி நடத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். இந்த நிலையில், ஹிஸ்புல்லா தலைவருக்கு அவர் அனுப்பியுள்ள செய்தியில், சட்டவிரோத இஸ்ரேல் அரசுக்கு எதிரான ஹிஸ்புல்லாவின் நடவடிக்கைகளை ஈரான் தொடர்ந்து ஆதரிக்கும். எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் குற்ற கொள்கைகளை ஈரான் தொடர்ந்து எதிர்க்கும் என கூறியுள்ளார். ஈரானைப் பொருத்தவரை யார் பிரதமராக இருந்தாலும், அந்நாட்டின் சுப்ரீம் தலைவரே அதிக அதிகாரம் படைத்தவராக கருதப்படுகிறார்.
1979ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சி மூலம் உருவாக்கப்பட்ட ஈரான், அன்று முதல் இஸ்ரேலை சட்டவிரோத நாடாக கருதி வருகிறது. எனவே ஆட்சியில் யார் இருந்தாலும், அந்நாட்டின் கொள்கை இஸ்ரேலுக்கு எதிரானதாகவே இருந்து வருகிறது.
====