ஒரிரு நாளில் ஈரான் நேரடி நடவடிக்கை – இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் எச்சரிக்கை!

ஓரிரு நாளில் ஈரான் தாக்குதல் நடத்தலாம்…
பொதுமக்களுக்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல்…
காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தை வியாழக்கிழமை மீண்டும் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே ஈரான் தனது தாக்குதலை நடத்தலாம் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஆக்கிரமிப்பு ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் கிடைத்த உளவுத் தகவல்களின் அடிப்படையில், ஈரான் வரும் நாட்களில் தாக்குதல் நடத்தலாம் எனக் கூறியுள்ளது.
ஈரான் தனது மண்ணில் இருந்து நேரடியாக இந்த தாக்குதலை நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இஸ்ரேலியர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு புதிதாக பேசுவதற்கு எதுவும் இல்லை என அறிவித்துள்ள ஹமாஸ், கடந்த ஜுலை மாதம் தாங்கள் விதித்த நிபந்தனைகள் அடிப்படையில், இஸ்ரேல் இந்த பேச்சுவார்த்தையை சமதான தூதுவர்களிடம் நடத்திக் கொள்ளலாம் என்றும், தங்கள் தரப்பில் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு, புதிய நிபந்தனைகளை விதித்தால், அதுபற்றி பரிசீலிப்பதாக கூறி, இஸ்ரேல் வேண்டுமென்றே நாட்களை கடத்தும் என்றும், அதற்கு தாங்கள் கலந்து கொள்ளாமல் இருப்பதே சிறந்த முடிவு என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ஹமாசின் புதிய அரசியல் குழுத் தலைவர் யஹ்யா சின்வர், போர் நிறுத்த பேச்சுவார்த்தையை தொடர சம்மதம் தெரிவித்து, எகிப்து, கத்தார் தலைவர்களிடம் ஒப்புதல் அளித்ததாக செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
====