இஸ்ரேலை தரைவழியாக கைப்பற்ற ஈரான் திட்டம் – நெதன்யாகு பரபரப்பு தகவல்!

இஸ்ரேலை கைப்பற்ற ஈரான் திட்டம்…
அதற்கு முன்பு சவுதி ஜோர்டான் நாடுகளையும் ஈரான் கைப்பற்ற முடிவு…
புதிய பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ள பெஞ்சமின் நெதன்யாகு…
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ ஜெனரல்கள் மற்றும் அட்மிரல்கள், இஸ்ரேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் அவர்கள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்துள்ளனர். இதுகுறித்து பல்வேறு முக்கியத் தகவல்களை டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலை அனைத்து புறங்களில் இருந்தும் தாக்கி கைப்பற்றும் திட்டத்தை ஈரான் வைத்துள்ளதாக அப்போது, நெதன்யாகு அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியுள்ளார். அதற்கு முன்னதாக, சவுதி அரேபியா, ஜோர்டான் நாடுகளில் ஆட்சி கவிழ்ப்பை அரங்கேற்றி, அந்நாட்டை ஈரான் ஆதரவாளர்கள் கைப்பற்றுவார்கள் என கூறியுள்ளார்.
மேலும் முதல்கட்டமாக ஹமாஸை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என ஈரான் விரும்புகிறது என நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவை பெரிய சாத்தான் என்றும், ஐரோப்பிய நாடுகளை இடைநிலை சாத்தான்கள் என்றும், இஸ்ரேலை குட்டிச் சாத்தான் என்றும் ஈரான் வரையறை செய்துள்ளதாக பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
சவுதி, ஜோர்டான் நாடுகள் மன்னர் ஆட்சி நாடுகளாகும். அதன் ஆட்சியாளர்கள், அமெரிக்காவின் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். எனினும் இஸ்ரேலின் அனைத்து திட்டங்களுக்கும் அவர்கள் செவிசாய்ப்பதில்லை. இதனால் அவர்களை ஈரானை காட்டி, அச்சுறுத்தவே இஸ்ரேல் பிரதமர் இப்படி ஒரு கருத்தை கூறி இருக்கலாம் என கருதப்படுகிறது.
எனினும் காசா விவகாரத்தில் சவுதி, அமீரகம், ஜோர்டான் நாடுகள் மீது உலக இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
====