அமெரிக்காவால் கூட இடைமறிக்க முடியாத ஆயுதம்! அறிமுகம் செய்த இரான்!
அமெரிக்கா, இஸ்ரேலால் இடைமறிக்க முடியாத அதி நவீன ஏவுகணை! பதற்றங்களுக்கு இடையே அறிமுகம் செய்து, மிரட்டிய ஈரான்! அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை தாக்கத் தயங்க மாட்டோம் என எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது வலுவான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசீர் சாதே எச்சரித்துள்ளார். அதிகரித்து வரும் ஈரான்-“இஸ்ரேல்” பதட்டங்களுக்கு மத்தியில், மேம்பட்ட காசிம் பாசிர் எனும் ஏவுகணையை அறிமுகம் செய்துள்ளார். அப்போது பேசிய அவர் ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் உரிய பதில் அளிக்கப்படும் என்றும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க நலன்கள் மற்றும் இராணுவத் தளங்களை குறிவைத்து, தெஹ்ரான் தயக்கமின்றி செயல்படும் என்றும் எச்சரித்தார்.
அமெரிக்க அதிகாரிகளின் சமீபத்திய அச்சுறுத்தல்களுக்கு பதிலளித்த நசீர் சாதே, “எங்கள் அண்டை நாடுகளுக்கு எதிராக நாங்கள் எந்த விரோதத்தையும் கொண்டிருக்கவில்லை. நாங்கள் அவர்களை சகோதரர்களாகப் பார்க்கிறோம். ஆனால் நாங்கள் தாக்கப்பட்டால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் எங்கள் இலக்குகளாக மாறும்” என எச்சரித்தார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட காசிம் பாசிர் ஏவுகணை மேம்பட்ட வழிகாட்டுதல் மற்றும் நவீன திறன்களை கொண்டுள்ளது, இது பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்க வடிவமைக்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு அமைப்புகளையும் முறியடிக்கும் திறன் கொண்டது என குறிப்பிட்டார்.
“காசிம் பாசிர் ஏவுகணை அதன் இலக்குகளை அதிக துல்லியத்துடன் தாக்கும் வல்லமை கொண்டது, மேலும் தற்காப்பு ரேடார் அமைப்புகளால் கண்டறியப்படாமல் உள் நுழைந்து தாக்கும்” என தெரிவித்தார்.
ஈரானிய அரசு தொலைக்காட்சியின்படி, “காசிம் பாசிர்” ஏவுகணை இரண்டு முக்கிய “ட்ரூ பிராமிஸ்” நடவடிக்கைகளின் போது பெறப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனிடையே பென் குரியன் விமான நிலையத்தில் யேமன் ஏவுகணைத் தாக்குதலுக்கு எதிரான இஸ்ரேலிய எதிர்வினை குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பொருத்தமான நேரத்தில் மற்றும் இடத்தில் ஈரானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நான்காவது சுற்று பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சமீப நாட்களில் ஈரானுக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
இஸ்ரேலிய வலைத்தளமான வாலாவின் அறிக்கைகளின்படி, ஈரானிடம் “இஸ்ரேலை” அடையும் திறன் கொண்ட சுமார் 2,000 பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் இஸ்ரேலிய இராணுவம் கடந்த 18 மாதங்களாக ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்க அதன் செயல்பாட்டுத் தயார் நிலையில் உள்ளதாகவும் ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்பின் அனுமதி இல்லாமல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒருதலைப்பட்சமாக தாக்குதலைத் தொடங்க அவர் அனுமதிக்க மாட்டார் என்பதாகவும் தெரிவித்துள்ளது.
====