ஊடுருவல் முயற்சி தோல்வி

வெள்ளிக்கிழமை இரவு வடக்கு ஆக்கிரமிப்பு இஸ்ரேலில் உள்ள அல் ஜலில் எனப்படும் கலிலி பகுதியில் இருந்து லெபனானில் உள்ள உடைசா பகுதிக்குள் இஸ்ரேலின் தரைப்படை நுழைய முயற்சித்தது. அப்போது, ஹிஸ்புல்லா வைத்திருந்த பதுங்கு குழி வெடிப்பொருட்கள் வெடித்து இஸ்ரேல் ராணுவத்திற்கு மிகப்பெரிய சேதாரம் ஏற்பட்டு இருக்கிறது.இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹிஸ்புல்லாவிற்கும் நள்ளிரவில் கடுமையான மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த மோதலுக்கு பிறகு பின் வாங்கிய இஸ்ரேல் ராணுவம், நள்ளிரவு இரண்டு மணி அளவில் லெபனான் உடைசா பகுதிக்குள் மீண்டும் நுழைய முயற்சித்தது.
இந்த முயற்சியையும் லெபனானின் எல்லையில் அரணாக நின்று ஹிஸ்புல்லா தடுத்து நிறுத்தியதாக அறிவித்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த தாக்குதல்களில் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த 20 பேருக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும் அதில் பலர் உயிர் இழந்திருப்பதாகவும் ஹிஸ்புல்லா கூறியிருக்கிறது.நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் இதுவரை எந்த தகவலும் அறிவிக்கவில்லை.
கடந்த நான்கு நாட்களாக லெபனானுக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைய முயற்சித்து வருகிறது. ஒவ்வொரு முறை முயற்சிக்கும் போதும் ஹிஸ்புல்லா கடுமையான எதிர் தாக்குதல்களை இஸ்ரேல் படையினருக்கு எதிராக நடத்தி வருகிறது.
மேலும் லெபனான் எல்லையில் இருக்கக்கூடிய இஸ்ரேலிய ராணுவ முகாம்கள் மீது தொடர்ச்சியான ராக்கெட் ஏவுகணைகளை ஹிஸ்புல்லா தரப்பு தொடர்ந்து ஏவி வருகிறது.