இந்தியாவில் மின்சார வசதியுடன் தொடங்கப்பட்ட முதல் சொகுசு ஹோட்டல்…

இந்தியாவில் மின்சார வசதியுடன் தொடங்கப்பட்ட முதல் சொகுசு ஹோட்டல்…
நட்சத்திர விடுதிகளில் வெள்ளையர்களுக்கு மட்டுமே இருந்த அனுமதியை மாற்றிய சம்பவம்…
தொழிலதிபர் டாடா கட்டிய மும்பை தாஜ் ஹோட்டலின் வரலாறு ஒரு பார்வை…
உலகத்தின் அதிசயங்களில் ஒன்றுதான் ஆக்ராவின் யமுனை நதி கரையில் இருக்கும் தாஜ்மகால். அதனை சுற்றுப்பார்க்க விரும்பாதவர்களே இந்த உலகில் கிடையாது எனலாம். அந்த வகையில் உலகில் இருக்கும் அனைவரும் தங்க விரும்பும் ஆடம்பர மாளிகைதான் மும்பையில் இருக்கும் தாஜ் ஹோட்டல். 100 ஆண்டுகளை தாண்டியும் தற்போதும் மும்பை நகரின் அடையாளமாக திகழ்கிறது இந்த மாளிகை.
இது தோன்றியதன் பின்னால் இருக்கும் கதை மிகவும் சுவாரசியமானது. ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது அவர்களில் சிலர் இந்தியர்களை தங்களுக்கு கீழானவர்களாக கருதினர். இதனால் பெரும்பாலும் ஆங்கிலேயர் இருக்கும் இடங்களில் சராசரி இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்படி ஒரு இடம்தான் மும்பை வால்டன் ஹோட்டல்.
ஆங்கிலேயரான வால்டன் என்பவரால் மும்பையின் கட்டப்பட்ட வால்டன் ஹோட்டல், அக்காலத்தில் மும்பையின் பிரபலமான ஹோட்டலாக இருந்தது. இந்த ஹோட்டலில் சாதாரண இந்தியர்களுக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வால்டன் ஹோட்டலுக்கு டாட்டா நிறுவனத்தின் நிறுவனரான ஜாம்சேதிஜி டாட்டா சென்றுள்ளார்.
ஆனால், அவரின் எளிய தோற்றத்தை பார்த்த ஹோட்டலில் இருந்த ஆங்கிலேய நிர்வாகிகள், அவரை ஹோட்டலுக்குள் நுழையவிடாமல் வெளியே அனுப்பியுள்ளனர். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த ஜாம்சேதிஜி டாட்டா, ஆங்கிலேயருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 1903-ம் ஆண்டு மும்பை கடற்கரை அருகே உள்ள இந்தியா கேட் கட்டிடத்தின் பக்கத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலை அமைத்துள்ளார். அதற்கு இந்தியாவின் சின்னமாக விளங்கும் தாஜ் மஹாலில் பெயரை சூட்டியுள்ளார்.
தாஜ் ஹோட்டல் உருவானதற்கு பின்னால் இப்படி ஒரு கதை இருக்கிறது. மற்றொரு கதையும் உள்ளது. மும்பையில் பெயர் சொல்லும் அளவு உலகத் தரம் வாய்ந்த ஆடம்பர சொகுசு ஹோட்டல் ஏதும் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் மும்பைக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒரு ஆடம்பர ஹோட்டல் ஒன்றை கட்டுமாறு, டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையின் ஆசிரியர், ஜாம்சேதிஜி டாட்டாவை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே ஜாம்சேதிஜி டாட்டா தாஜ் ஹோட்டலை கட்டியதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதில் எந்த கதை உண்மையானது என்பது தெரியாவிட்டாலும், மும்பையின் அடையாளமாக தாஜ் ஹோட்டல் தற்போது வரை இருக்கிறது என்பதே உண்மை. இந்த ஹோட்டலுக்கு அமெரிக்க அதிபர்கள் பில் கிளிண்டன், பராக் ஒபாமா முதல் பீட்டில்ஸ் இசைக்குழு, ரோஜர் மூர், ஜோன் காலின்ஸ், மிக் ஜாக்கர், ஏஞ்சலினா ஜோலி, பிராட் பிட் போன்ற உலக நட்சத்திரங்கள் வரை பலரும் தங்கியிருந்துள்ளனர். மேலும், மும்பைக்கு வரும் பணக்காரர்கள் தங்க விரும்பும் முதல் இடமாகவும் தாஜ் ஹோட்டலே தற்போதுவரை திகழ்ந்து வருகிறது.
தற்போது தாஜ் ஹோட்டலில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு குறைந்தபட்சமே 22,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. presidental shoot போன்ற அறைகளுக்கு பல லட்ச ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. தாஜ் ஹோட்டலை கட்ட 1903-ம் ஆண்டே 4 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் மின்சாரத்தில் இயங்கிய முதல் கட்டிடமாகவும், டெலிபோன், மின்சார லிப்ட் மற்றும் குளிர்சாதன பெட்டி போன்ற வசதிகள் கொண்ட முதல் கட்டிடமும் என்ற பெருமையையும் இந்த ஹோட்டல் பெற்றுள்ளது. நூற்றாண்டுகளை கடந்த தாஜ் ஹோட்டல் ஏராளமான ஆடம்பரங்களையும், கொண்டாட்டங்களை, கொண்டு, நம் கண் முன்னே கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
==========