லீவு கொடுக்க மறுத்த பாஸ்; ஆன்லைனில் நடந்த நிக்கா!
துருக்கியில் வசிக்கும் இந்தியர் ஒருவர், தனக்கு லீவு கிடைக்காததால் வீடியோ கால் மூலமாக திருமணத்தை நடத்தி முடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
வேலைக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு விடுமுறை கிடைப்பது என்பது சாதாரணமான காரியம் கிடையாது. பண்டிகை நாட்களில் விடுப்பு கிடைக்கவில்லை என்றால் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் ஒருவருடைய திருமணத்திற்கு செல்ல விடுமுறை கிடைக்கவில்லை என்றால் என்ன செய்ய முடியும். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையையும் ஒருவர் தனது புத்திகூர்மையால் சமாளித்துள்ளார்.
பிலாஸ்பூரைச் சேர்ந்த அட்னான் முஹம்மது, துருக்கியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இமாச்சலைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடத்த வீட்டார் நிச்சயம் செய்திருந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மணமகளின் ஊரில் திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால் அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காததால், குறிப்பிட்ட நேரத்திற்கு மணமகனால் வந்து சேர முடியாமல் போனது.
இதனை தனது வீட்டிற்கும், மணமகளின் வீட்டிற்கும் தெரியப்படுத்திய மணமகன், வீடியோ கால் மூலமாக நிக்காவை நடத்த வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட மணப்பெண்ணின் குடும்பத்தினர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். ஆன்லைன் வீடியோ கால் மூலமாக மணமகன் துருக்கியிலும், மணப்பெண் இமச்சாலப்பிரதேசத்திலும் இருந்த படியே ஹாஜி முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இக்கட்டான சூழ்நிலையில் கைகொடுத்து, புது வாழ்க்கைக்கு தொடக்கமாக அமைந்த நவீன தொழில்நுட்பத்திற்கு இருவீட்டாரும் நன்றி தெரிவித்தனர்.