அந்த லிஸ்ட்டை கொடுங்க… பாகிஸ்தானுக்கு அடுத்த ஆப்பை தயார் செய்யும் இந்தியா!

பாகிஸ்தானின் வெட்கம் கேட்ட வேலையை கண்டுபிடித்த இந்தியா…
மருந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு…
காஷ்மீரின் பகல்காம் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 நபர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் அட்டாரி வாகா எல்லை மூடல், சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு, விசா மறுப்பு, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைப்பு போன்ற சில அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.
மேலும் பாகிஸ்தானுடன் நேரடி வர்த்தக உறவை இந்தியா துண்டித்தது. குறிப்பாக அங்கு தற்போது மருந்துகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளதால் மருத்துவ அவசரநிலை பிறப்பிக்கும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் மருந்து விற்பனையில் 40 சதவிகிதம் வரை இந்தியாவில் இருந்து நேரடியாகவும் இந்தியாவில் உருவாக்கப்பட்டு வேறு நாடுகள் வழியாகவும் பாகிஸ்தானுக்கு செல்கிறது. பாகிஸ்தான் அதன் மருந்து மூலப்பொருட்களில் 30% முதல் 40% வரை இந்தியாவை நம்பியுள்ளது, இதில் செயலில் உள்ள மருந்து பொருட்கள் மற்றும் பல்வேறு மேம்பட்ட சிகிச்சை பொருட்கள் அடங்கும். குறிப்பாக புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சைகள், உயிரியல் தயாரிப்புகள், தடுப்பூசிகள் மற்றும் செரா, குறிப்பாக ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி மற்றும் பாம்பு விஷத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. இதனால் பாகிஸ்தானின் மருத்துவ துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களின் பட்டியலைத் அளிக்குமாறு மருந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பாக உத்தரவிட்டுள்ளது. ஏனெனில் துபாய், சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் வர்த்தக தடையை மீறி பாகிஸ்தானுக்கு செல்வதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய பொருட்கள் பாகிஸ்தானுக்கு மறைமுகமாக செல்வதாக சொல்லப்படுகிறது. அதாவது துபாய், சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரிசலுகையுடன் அந்நாட்டு சேமிப்பு கிடங்கில் வைக்கப்படும் இந்திய பொருட்களில் இந்திய லேபில்களை மறைத்து துபாய் தயாரிப்பு என்பது போன்ற போலி லேபில் ஒட்டப்பட்டு துபாய் தயாரிப்பு என்ற போர்வையில் அதிக விலையுடன் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஏற்கனவே சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில் தற்போது மறைமுக வர்த்தகத்தையும் இந்தியா தடுக்க நடவடிக்கை எடுத்ததால் பொருளாதார ரீதியில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்தியா நேரடியாக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தாமல் வர்த்தக ரீதியில் பாகிஸ்தானுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.