“சல்மானை பகைத்தால், சகலத்தையும் இழந்தேன்” கண்ணீர் வடித்த விவேக் ஓபராய்!

சல்மான்கானை எதிர்த்தால், திரை வாழ்க்கையை இழந்த விவேக் ஓபராய்…
பொது நிகழ்ச்சியில் பழைய சம்பவங்களை நினைவுபடுத்தி கண்ணீர்…
பாலிவுட் திரையுலகை தங்கள் இரும்புப் பிடிக்குள் வைத்திருப்பவர்கள் கான் நடிகர்கள். சாருக்கான், சல்மான் கான், அமீர்கானை மீறி எதுவும் செய்ய முடியாது. இந்த சூழலில் தான் சல்மான்கானை விமர்சித்ததால், தனது வாழ்க்கையையே இழந்து விட்டதாக, நடிகர் விவேக் ஓபராய் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது வைரலாகி வருகிறது.
இந்தியில் திடீரென பிரபலமாகி, சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தவர் விவேக் ஓபராய். இதனை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து வந்தனர் கான் நடிகர்கள். இந்த நிலையில் தொடர் வெற்றிகள் மூலம் மிதப்பில் இருந்த விவேக் ஓபராய், நிகழ்ச்சி ஒன்றில் லூஸ் டாக் ஒன்றை விட்டார்.
அதாவது, ஐஸ்வர்யா ராய் – சல்மான்கான் இருவரும் காதலித்து பிரிந்து விட்டதாகவும், தற்போது, ஐஸ்வர்யா ராயுடன் தான் பழகி வருவது சல்மான் கானுக்கு பிடிக்கவில்லை என்றார். மேலும் சல்மான் தன்னை மிரட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
அவரது பேச்சு இந்தி திரையுலகில் பெரும் சர்ச்சையான நிலையில், அன்று முதல் அவருக்கு முடிவுரையும் எழுதப்பட்டது. பல இந்தி தயாரிப்பாளர்கள், அவருக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்தனர்.
அப்போது சல்மான் கானின் காதலியாக இருந்த நடிகை கத்ரினா கைஃப், விவேக் ஓபராய் உடன் நடிக்க வந்த வாய்ப்பை உதறித் தள்ளினார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, சல்மான் பற்றி, விவேக் ஓபராய் பேசியது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று எனக் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், லண்டனில் இந்தியா குளோபல் ஃபோரம் என்ற நிகழ்ச்சியில் பேசிய விவேக் ஓபராய், நான் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்தேன். விருதுகளை குவித்தேன். ஆனால் அது எல்லாம் காணல் நீரானது. இதற்கு காரணம் சில மனிதர்கள். அவர்களுக்கு பாலிவுட்டில் பெரும் பலம் இருக்கிறது. இனி நீங்கள் இங்கு வேலை செய்ய முடியாது.
நாங்கள் அதனை அனுமதிக்க மாட்டோம் என்றனர். அதைப் போலவே செய்தனர். இதனை எப்படி எதிர்கொள்வது என எனக்குத் தெரியவில்லை. நான் கோபப்பட்டேன். அழுது புலம்பினேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
====