பாஜகவினர் சொன்னதால் செய்தேன் – பதவியை பறித்த எடப்பாடி!

பாஜக சார்பில் நடத்தப்பட்டு வரும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான இயக்கத்தில் கையெழுத்து போட்ட முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.பாஜகவினர் அழுத்தம் கொடுத்து வற்புறுத்திக் கேட்டதால் கையெழுத்திட்டேன் என்றும், இதுகுறித்து பொதுச் செயலாளரை சந்தித்து தன் தரப்பு விளக்கத்தை அளிப்பேன் என்றும் முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் தெரிவித்துள்ளார்.தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்காமல் உள்ளது. இந்தி திணிப்புக்கு வழிவகுக்கும் மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் நிதி விடுவிக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி வருகிறார்.இதனை அதிமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் தான் பாஜகவினர் நடத்திய கையெழுத்து பிரச்சாரத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் கையெழுத்திட்டுள்ளார்.
முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ K.S.விஜயகுமார் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என கூறி இருந்தார்.