மண்ணோடு மண்ணாக புதைந்த மக்கள் – அல் மவாசி அகதிகள் முகாம் சம்பவம் நடந்தது எப்படி?

பாதுகாக்கப்பட்ட பகுதி மீதே குண்டு வீசிய இஸ்ரேல்….
மண்ணோடு மண்ணான 1000க்கும் மேற்பட்ட மக்கள்…
90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரம்…
காசாவின் கான்யூனிசில் உள்ள அல் மவாசி அகதிகள் முகாமில் சுமார் 80 ஆயிரம் மக்கள் குறுகிய பகுதிகளில் மிகுந்த நெருக்கமாக வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தன. இதனால் இங்கு தாக்குதல் நடத்தப்படாது என பாலஸ்தீனியர்கள் நம்பி இருந்தனர்.
இந்தச் சூழலில் திடீரென முகாம் மீது, 5 வெடிகுண்டுகள் விமானங்களில் இருந்த வீசப்பட்டன. 5 ஏவுகணைகளும் வீசப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் உயிர் பிழைத்த ஒருவர் அல் ஜசீராவிடம் கூறும் போது, பெண்கள், குழந்தைகள், முதியவர்களின் உடல் பாகங்கள் அப்பகுதி முழுவதும் சிதறிக் கிடந்ததாக தெரிவித்துள்ளார்.
உடல் பாகங்களை இழந்து, துடிதுடித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அங்கு மருத்துவமனைகளோ, மருந்துகளோ, மருத்துவர்களோ இல்லை. இதனால் உயிர் பிழைத்தவர்களின் நிலை, இறந்தவர்களின் நிலையை விட மோசமாக இருந்தது.
ஹமாசின் ராணுவ பிரிவு தலைவர் முகமது டெயிஃப் என்பவர் அந்த முகாமில் இருந்ததால், தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளதை, ஹமாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என தெரிவித்துள்ள ஹமாஸ், தங்கள் தலைவர்கள், பொதுமக்களோடு தஞ்சம் அடையமாட்டார்கள் என கூறியுள்ளது.
இந்தச் சம்பவம் உலகத்தையே உலுக்கி இருந்தாலும், அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் தான் உள்ளனர். குறிப்பாக அரபு முஸ்லீம் நாடுகள் வெற்று கண்டனஅறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த முகாம் மீது இதற்கு முன்பு பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் கொல்லப்பட்டனர்.
====