அமரன் திரைப்படத்தால் தூக்கத்தை இழந்த சென்னை மாணவன்!

அமரன் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண்ணால் சென்னையைச் சேர்ந்த மாணவன் ஒருவர் தூக்கத்தை தொலைத்துள்ளார்.
நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. இப்படத்தில் ஆரம்பத்தில் இருந்தே முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
காதல் காட்சிகளிலும் சரி, ராணுவ வீரரின் மனைவியாக அவரைப் பிரிந்து வாடும் காட்சிகளிலும் சரி சிரிப்பு, அழுகை, சோகம் என அனைத்து உணர்வுகளையும் சாய் பல்லவி அழகாக வெளிப்படுத்தியிருந்தார். இதனால் சாய் பல்லவியை பாராட்ட ஆசைப்பட்டு ரசிகர்கள் செய்த காரியம் சென்னை மாணவர் ஒருவரின் தூக்கத்தை கெடுத்துள்ளது.
இந்த படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு தனது மொபைல் எண்ணை ஒரு பேப்பரில் எழுதி கசக்கிப்போடுவது போல் ஒரு சீன் வரும். அந்த தொலைபேசி எண் நிஜமாகவே சென்னையைச் சேர்ந்த வாகீசன் வி.வி. என்ற மாணவனுடையது. அமரன் படத்தில் நடித்த சாய் பல்லவியை பாராட்ட வேண்டும் என்று, தினந்தோறும் நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் தன் எண்ணிற்கு வருவதாக அந்த மாணவர் சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை மேலும் மோசமாக்கும் வகையில், யாரோ ஒருவர் “வாகீசன் இந்து ரெப்பிகா வி.வி” என்று ட்ரூகாலரிலும் சேமித்து, வைத்துள்ளார். இதனால் இந்திய முழுவதிலும் இருந்து தினந்தோறும் ஏராளமான மெசெஜ் மற்றும் போன் கால்கள் நேரம் காலம் இல்லாமல் வந்து கொண்டிருக்கிறதாம். இதனால் தூக்கத்தை தொலைத்துவிட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண் உண்மையானது அல்ல, அது தன்னுடையது என விளக்கி, சமூக ஊடகங்களில் ஒரு செய்தியை வெளியிடும்படி, படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் கதாநாயகன் சிவகார்த்திகேயன் ஆகியோரை தொடர்பு கொள்ள முயன்று வருகிறார்.