ஹவுத்தி நடவடிக்கைகளால் இஸ்ரேல் துறைமுகத்திற்கு ரூ. 114 கோடி நட்டம்!

இஸ்ரேலின் ஈழட் துறைமுகத்திற்கு கப்பல்கள் செல்லாததால் 114 கோடி ரூபாய் நட்டம்…
ஹவுத்திப் படைகளின் நடவடிக்கையால், மூடப்பட்ட துறைமுகம்…
காசா மீதான இஸ்ரேலின் 10 மாத இனப்படுகொலைகளில் இதுவரை சுமார் 39 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்படாமல் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 90 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.
அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் இல்லை. இந்த நிலையில், இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தும் வரை, செங்கடல் வழியாக இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களை தடுத்து நிறுத்துவோம் என ஏமன் ஹவுத்திப்படைகள் அறிவித்தன.
இதனைத் தொடர்ந்து, 10 மாதங்களாக இஸ்ரேலின் ஈழட் துறைமுகத்திற்கு செல்லும் கப்பல்களை ஏமன் படைகள் தாக்கி வருகின்றன. இதனால் ஈழட் துறைமுகம் கப்பல் வருகையின்றி, வெறிச்சோடியது.
சுமார் 85 சதவீத போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ஊழியர்கள் வேலையில் இருந்து படிப்படியாக விடுவிக்கப்பட்டு வந்தனர். தற்போது, துறைமுகம் மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த 10 மாதங்களில் மட்டும் துறைமுகத்துக்கு 114 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது மட்டுமின்றி, செங்கடலின் சூயஸ் கால்வாய் வழியாக செல்வதையும் சரக்கு கப்பல்கள் நிறுத்திக் கொண்டதால், எகிப்து நாட்டுக்கு சுமார் 18 ஆயிரம் கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது.
எகிப்து, இஸ்ரேலின் அண்டை நாடாக உள்ளது. முஸ்லீம் நாடாக இருந்தாலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நட்பு நாடாக எகிப்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
====