இஸ்ரேல் தலைநகர் மீது ஹவுத்திக்கள் மாபெரும் தாக்குதல் – அபாய பகுதியாக அறிவிக்கப்பட்ட டெல் அவிவ்!

3000 கிலோ மீட்டர் பயணித்து வந்து இஸ்ரேலை தாக்கிய ஏமன் ஆள் இல்லா விமானம்…
ஐயன் டோமை ஏமாற்றி இஸ்ரேலுக்குள் ஊடுருவி திடீர் சம்பவம்…
10 பேர் காயம் அடைந்த நிலையில் ஒரு இஸ்ரேலியர் உயிரிழப்பு…
முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடியாக மிகப்பெரும் தாக்குதல் ஒன்றை ஏமன் ஹவுத்திப் படைகள் நடத்தியுள்ளனர். இது இஸ்ரேலில் பயங்கர கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் தாழ்வான உயரத்தில் கடலிலேயே பயணித்து வந்த ஏமனின் அதி நவீன ஆள் இல்லா விமானம், தலைநகர் டெல் அவிவ்விற்குள் வெற்றிகரமாக ஊடுருவியுள்ளது.
பிறகு நகரின் இதயப் பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே உள்ள ஒரு கட்டிடத்தை, அந்த ஆள் இல்லா விமானம் தாக்கியுள்ளனர். வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் இஸ்ரேல் ஆளும் வர்க்கத்தை அசைத்துப் பார்த்துள்ளது.
தாக்குதல் நடைபெற்ற பகுதி, பெரும் நட்சத்திர விடுதிகள், அரசு அலுவலகங்கள், அதிகாரிகளின் வீடுகள் உள்ள முக்கிய பகுதி ஆகும். அப்படி இருக்கும் போது, இஸ்ரேலின் பல தரப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளால் ஏமனின் ஆள் இல்லா விமானத்தை கண்டறிய முடியாதது, இஸ்ரேலியர்களிடம் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
New footage shows the Houthi drone attack on Tel Aviv early this morning. pic.twitter.com/aEuF8cjIwU
— Emanuel (Mannie) Fabian (@manniefabian) July 19, 2024
அதிகாலையில் பெரும் சத்தம் கேட்டதாகவும், விழித்துப் பார்க்கும் போது, தங்களது வீடுகளில் உள்ள பொருட்கள் தங்கள் மீது விழுந்து கிடந்ததாகவும் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஏமன் ஹவுத்திப் படைகள், SAMAD 3 என்ற நவீன ஆள் இல்லா விமானம் மூலம் இதனை நிகழ்த்தியதாக கூறியுள்ளனர்.
இந்த ஆள் இல்லா விமானம், ஐயன் டோம் உள்ளிட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள், ராடார் கருவிகளின் அலைகளில் சிக்காமல் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
இந்த தாக்குதலால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 4 பேருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், எஞ்சியவர்களுக்கு அதிர்ச்சியால் ஏற்பட்ட மனநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
காசா மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக ஏமன் ஹவுத்திப் படைகளின் ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சரி தெரிவித்துள்ளார்.
======