செவ்வாய் கிழமை மீண்டும் சம்பவம் – 2வது நாளாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பை முறியடித்து தாக்கிய ஹிஸ்புல்லா!

இஸ்ரேலின் வான்பாதுகாப்பு மீண்டும் முறியடிப்பு…
ஹிஸ்புல்லா ஆள் இல்லா விமானம் ஊடுருவி தாக்குதல்….
இஸ்ரேல் நகரங்களில் தீப்பற்றி எரியும் காட்சிகள் வைரல்…
திங்கட்கிழமை இஸ்ரேலின் வான் பாதுகாப்பை வெற்றிகரமாக முறியடித்து ஹிஸ்புல்லா நடத்திய ஆள் இல்லா விமானத் தாக்குதலில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவத்தினர் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், செவ்வாய்கிழமையும், அதே பாணியிலான தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்தியுள்ளது.
இதில் சாலையில் காரில் பயணித்துக் கொண்டிருந்த ஆக்கிரமிப்பாளர் ஒருவர் உட்பட 2 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஈரானின் அச்சுறுத்தல் காரணமாக, இஸ்ரேல் ராணுவம் முழு தயாரிப்பில் உள்ளதாக கூறி வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து வான் வரும் அச்சுறுத்தல்களை முறியடிப்பதோடு, பதில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரித்து வருகிறது. ஆனால் ஹிஸ்புல்லா தொடர்ந்து 2வது நாளாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பை முறியடித்துள்ளது. இதனால் இஸ்ரேல் மீதான நம்பிக்கை அந்நாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடம் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஸ்புல்லாவின் ஆள் இல்லா விமானத் தாக்குதல் குறித்த வீடியோக்களை, அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்த காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன. இதனிடையே தங்களது அண்மைத் தாக்குதல்கள், தங்களது தளபதி ஃபவுத் சுக்கூர் படுகொலைக்கான பதிலடிகள் அல்ல என்றும் காசா மக்களுக்கு ஆதரவான தாக்குதல்கள் என ஹிஸ்புல்லா விளக்கம் அளித்துள்ளது.
தங்களது தளபதி சுக்கூர் படுகொலைக்கான பதிலடி மிகக் கடுமையானதாக, மிகப்பெரிய ஒன்றாக இருக்கும் என்றும் ஹிஸ்புல்லா எச்சரித்துள்ளது. ஹிஸ்புல்லாவின் தாக்குதல்கள் காரணமாக செவ்வாய்கிழமையும், வடக்கு இஸ்ரேலின் பல நகரங்களில் பலமுறை அபாய எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டதாக ஆக்கிரமிப்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
====