துடிதுடிக்க உயிரிழந்த யானை – இதயத்தை உடைக்கும் வீடியோ வைரல்!

அசாமில் ரயில் மோதி யானை துடிதுடிக்க உயிரிழந்த வீடியோ வைரல்…
தமிழ்நாட்டில் இருந்து பாடம் கற்காத வட இந்திய மாநிலங்கள்…
400 விபத்துக்களை தடுத்து யானைகளை காப்பற்றிய தமிழ்நாடு வனத்துறை…
அசாம் மாநிலம் மோரிகாவோன் மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானை, சிலிச்சர், கஞ்சன்ஜுங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி, துடிதுடிக்க உயிரிழந்த வீடியோ கண்ணீரை வரவைக்கிறது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரயில்வே, யானைகள் வழித்தடம் அல்லாத பகுதி என்பதால், ரயில் வேகமாக வந்ததாகவும், யானை தண்டவாளத்தில் இருப்பதை பார்த்த, லோகோ பைலட், வண்டியை நிறுத்த முயற்சித்தும், முடியவில்லை என அலட்சியமாக விளக்கம் தரப்பட்டுள்ளது.
எனினும் நெட்டிசன்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. யானைகள் இறப்பதை தடுக்க பல வழிகாட்டுதல்கள் இருந்தும் அவை பின்பற்றப்படுவதில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகள் காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 186 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன. இதில் பெரும்பாலானவை வட இந்திய மாநிலங்களாகும்.
தமிழ்நாட்டில் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதை தடுக்க AI எனப்படும் Artificial intelligence முறை அறிமுகம் செய்யப்பட்டு மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனை பிற மாநிலங்கள் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என கேள்வி எழுந்துள்ளது.
கோவை – கேரள எல்லையான மதுக்கரையில் அடிக்கடி ரயில் மோதி யானைகள் உயிரிழப்பு ஏற்பட்டதையடுத்து சுமார் 7 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. யானைகள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் ஏ.ஐ. கேமரா பொருத்தப்பட்டிருக்கும்.
அவ்வழியாக தண்டவாளத்தில், ரயில் வரும் நேரங்களில், யானைகளோ, மனிதர்களோ இருந்தால் அதுபற்றிய எச்சரிக்கை செய்தி, வனத்துறை அதிகாரிகளுக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் சென்றடையும். ரயில் 100 மீட்டருக்கு முன்னரே நிறுத்தப்படும்.
இந்த வகை கேமராக்கள் பாகிஸ்தான் எல்லையில், ராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதே போல, கண்காணிப்பு மையத்தில் 4 ஊழியர்கள், கேமராக்களை தொடர்ந்து கண்காணித்து வருவார்கள்.
இந்த முறை மூலம் இதுவரை சுமார் 400 விபத்துக்கள் தடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தெரிவித்த முன்னாள் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, யானைகள் மட்டுமின்றி, பிற விலங்குகளின் உயிர்களும் இந்த முறை மூலம் காப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் வனத்துறை ரோந்து பணிகளையும் மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.
ஒன்றிய அரசும் இந்த திட்டத்தை பல மாநிலங்களில் அறிமுகம் செய்துள்ளது. எனினும், அது போதிய அளவில் இல்லை என்பதையே அசாம் விபத்து காட்டியுள்ளது.
யானைகள் உயிரிழப்பை தடுக்க ஒன்றிய மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
====