யாசர் அரபாத் போட்ட ஒப்பந்தத்தை எதிர்த்த ஹமாஸ் – இஸ்ரேலுடன் பகை ஏற்பட்ட வரலாறு! யாசர் அரபாத் போட்ட ஒப்பந்தத்தை எதிர்த்த ஹமாஸ் – இஸ்ரேலுடன் பகை ஏற்பட்ட வரலாறு!

பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்ததற்கு காரணமான ஓஸ்லோ ஒப்பந்தம் குறித்தும், ஹமாஸ் அமைப்பு எடுத்த நிலைப்பாடு குறித்தும் பார்க்கலாம்.இஸ்ரேலை நடுநடுக்க வைத்து, பாலஸ்தீனியர்களின் ஒப்பற்ற உலகத் தலைவராக உருவெடுத்த யாசர் அரபாத்தையே… ஒரு கட்டத்தில் தலையில் தட்டி அமர வைத்தது இஸ்ரேல்.
ஒஸ்லோ ஒப்பந்தங்கள் எனப்படும் 2 ஒப்பந்தங்கள் இஸ்ரேலுக்கும், யாசர் அரபாத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இடையே கையெழுத்தானது.இந்த ஒப்பந்தங்கள் பாலஸ்தீனியர்களை இஸ்ரேலுக்கு அடிமைகளாக்கி விட்டதாக கடும் எதிர்ப்புகள் எழுந்தன.அந்த ஒப்பந்தத்தின் முக்கிய சரத்துக்களை பார்க்கலாம்.
இஸ்ரேலை ஒரு நாடாக பாலஸ்தீனியர்கள் அங்கீகரிக்க வேண்டும்.இஸ்ரேல் உடனும், உலக நாடுகள் உடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பாலஸ்தீன பிரதிநிதியாக யாசர் அரபாத்தை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளும்.
பாலஸ்தீனத்தின் கடல், வான், நிலம் ஆகிய 3 எல்லைகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும்.
பாலஸ்தீனியர்கள் அதிகம் வாழும் மேற்குகரை, காசா ஆகிய பகுதிகளில் உள்ளூர் போலீஸ் படையை பாலஸ்தீனியர்கள் அமைத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக பாலஸ்தீனிய பகுதிகளில் தேர்தல் நடத்தி நகர அமைப்புகளை அமைத்துக் கொள்ளலாம். இது தான் ஓஸ்லோ ஒப்பந்தத்தின் முக்கிய சரத்துக்கள்.இந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு பாலஸ்தீனியர்களிடம் குழப்பம் உருவானது.இஸ்ரேலை ஒருநாளும் எதிர்க்க முடியாது, எனவே அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டு,,,, இருக்கிற இடம் தெரியாமல் இருந்து விடலாம் என்றது ஒரு தரப்பு.இப்போது இருக்கும் பகுதிகளை மட்டும் தனி நாடாக மாற்றிக் கொண்டு, அவர்கள் இருக்கும் பகுதியை அவர்களுக்கே விட்டு விடலாம் என்றது மற்றொரு தரப்பு.
ஆனால் 3வது ஒரு தரப்பு எடுத்த முடிவு இஸ்ரேலையும், அமெரிக்காவையும் நடுநடுக்க வைத்தது.நம் சொந்த நிலங்களை அபகரித்துக் கொண்டு, நமக்கு கட்டளையிட இஸ்ரேலுக்கு அதிகாரம் இல்லை, முதலில் இஸ்ரேல் ஒரு நாடே இல்லை, இஸ்ரேலை அனுமதித்தால், பாலஸ்தீனியர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்படுவார்கள். எனவே உலக வரை படத்தில் இருந்து இஸ்ரேல் துடைத்தெறியப்பட வேண்டும் என்றது 3வது தரப்பு.இந்த பிரிவினரின் குரலை ஒலித்தது தான் ஹமாஸ்.