காசா மீது குண்டு வீசும் இஸ்ரேல் விமான படையினர் 2000 பேரின் முழு விபரங்களை வெளியிட்ட ஹமாஸ்!

இஸ்ரேல் விமானப்படையினர் 2000 பேரின் விபரங்களை வெளியிட்ட ஹமாஸ்…
காசா மீது குண்டு வீசி குழந்தைகளை கொல்பவர்கள் என தலைப்பிட்டு எச்சரிக்கை…
தொலைப்பேசி எண் முதல் முகநூல் கடவுச் சொல் வரை அம்பலப்படுத்தியதால் பரபரப்பு…
இஸ்ரேல் விமானப் படையினர் 2000 பேரின் முழு விபரங்களை ஹமாஸ் திரட்டி வைத்துள்ளதாக இஸ்ரேல் பத்திரிக்கையான ஹாரெட்ஸ் (haaretz.) பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.
சுமார் 200 பக்கங்கள் கொண்ட ஆவணத்தில், இஸ்ரேல் விமானப் படையினரின் பெயர், அடையாள அட்டை எண், குடும்ப உறுப்பினர்கள் விபரம், வாகன பதிவு எண், மொபைல் எண், இமெயில் முகவரி, கிரிடிட் கார்டு எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட துல்லிய விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
காசாக் குழந்தைகளை படுகொலை செய்யும் கொலைகாரர்கள் எனத் தலைப்பிட்டு, அந்த ஆவணத்தை ஹமாஸ் சர்வதேச ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளது. இது இஸ்ரேலிய ராணுவத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இஸ்ரேல் ராணுவத்தில் உயர் அதிகாரிகள் மட்டுமே தங்களது புகைப்படம் மற்றும் விபரங்களை வெளியிட அனுமதி உண்டு.
இடைநிலை, கடைநிலை அதிகாரிகள் தங்களது அடையாளங்களை வெளியிடக் கூடாது. காரணம், அவர்களின் உயிருக்கு ஆபத்து நேர்ந்து விடும். இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலின் சைபர் பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்றி, தகவல்களை எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவ தகவல் தொழில்நுட்ப அதிகாரி காபி சிபோனி (Gabi Siboni) என்பவர் கூறும் போது, ஈரான், ஹமாஸ், ஹிஸ்புல்லா தரப்பினர், இஸ்ரேல் ராணுவத்தினரின் விபரங்களை தொடர்ந்து திருடி வருகின்றனர்.
இதனைத் தடுக்க சைபர் செக்கியூரிட்டி ஐயன் டோம் உருவாக்கப்பட்டு வருகிறது. அது தற்போது, ஆரம்ப நிலையில் உள்ளது. தனிப்பட்ட ராணுவ வீரர்களின் தகவல்கள் திருடப்படுவது பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது என அவர் கூறியுள்ளார்.
====