400 சொகுசு கார்களைக் கொண்ட முடி திருத்தும் தொழிலாளி – யார் இந்த ரமேஷ் பாபு?

பார்பர் என்றாலே, சலூனுக்கு வரும் வாடிக்கையாளருக்கு மொட்டையடித்தும் முடி வெட்டியும் கிடைக்கும் வருமானத்தில் மிக, மிக எளிமையான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருப்பார் என நினைப்போம். ஆனால் பெங்களூருவைச் சேர்ந்த ரமேஷ் பாபு என்ற பார்பர் இந்தியாவின் பில்லினியர் பார்பர், அதாவது பணக்கார பார்பர் என செல்லமாக அழைக்கப்படுகிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்து வெறும் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ரமேஷ் பாபு, தனது கடின உழைப்பால் இன்று இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு விஸ்வரூப வெற்றி அடைந்துள்ளார்.
பெங்களூருவில் ஒரு சிறிய சலூன் கடையை திறந்த ரமேஷ் பாபு, அன்றாட வருமானம் குடும்ப செலவுக்கு போதாததால் நியூஸ் பேப்பர் போடுவது, பால் போடுவது என பல வேலைகளைப் பார்த்து வந்துள்ளார். இன்னர் ஸ்பேஸ் என்ற பெயரில் தனது சலூன் கடையை மார்டனாக மாற்றியமைத்த கையொடு, 1993 ஆம் ஆண்டில், மாருதி ஆம்னி வேன் ஒன்றினை வாங்கி வாடகைக்கு விட்டுள்ளார். ரமேஷின் டிராவல்ஸ் பிசினஸ் நல்ல படியாக வளர ஆரம்பித்தது. “ரமேஷ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்” என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதுவும் நன்றாக பிக்கப் ஆகவே, தனது வாடிக்கையாளர்களை சாமானியர்களில் இருந்து ஐகிளாஸுக்கு மாற்றினார். 2004ம் ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் செடான் காரை வாங்கி தனது சொகுசு வாகன ட்ராவல்ஸை ஆரம்பித்தார். தற்போது ரமேஷிடம் BMW, ஜாகுவார், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்ஸ், மெர்சிடிஸ்-மேபேக் என 400 க்கும் மேற்பட்ட High end கார்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் போன்ற செலிபிரிட்டிகள் கூட ரமேஷ் பாபுவிடம் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்துள்ளார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தற்போது ரமேஷ் பாபுவின் சொத்து மதிப்பு மட்டும் 1200 கோடி ரூபாய் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.