உலகம்

பச்சை பொய்! மீண்டும் பின்நோக்கி…

பேஜர் தாக்குதல், ஹசன் நஸ்ருல்லா கொலையை தொடர்ந்து, தங்களுக்கு மிகப்பெரும் வெற்றி கிடைத்து விட்டதாக அறிவித்த இஸ்ரேல், திங்கட்கிழமை இரவு தெற்கு லெபனானுக்குள் சிறிய அளவில் தரை வழியாக நுழைந்ததாக அறிவித்தது. இதனை திட்டவட்டமாக ஹிஸ்புல்லா மறுத்துள்ளதோடு, அப்படி நுழைந்தால், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என விளக்கம் அளித்தது.இந்நிலையில் ஏன் இஸ்ரேல் திட்டமிட்டு, பொய்யை பரப்பியது, திங்கட்கிழமை இரவு என்ன நடந்தது போன்ற விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அல்ஜசீரா ஊடகத்தின் பெய்ரூட் செய்தியாளர் வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது,இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே 120 கிலோ மீட்டர் தூர எல்லை உள்ளது. இதில் எந்த இடத்தில் இஸ்ரேல் படைகள் உள்ளே நுழைந்தன என்று தெளிவாக அவர்கள் அறிவிக்கவில்லை. இதே போல் அந்த எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அமைதிப் படையும், அப்படி ஒரு முயற்சி நடைபெற்றதாக பதிவு செய்யவில்லை.

அதே நேரம் இஸ்ரேல் படைகள், உள்ளே நுழைந்தால், அதனை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்த ஹிஸ்புல்லா காத்திருக்கிறது. இஸ்ரேலுக்கு கொடுக்கும் அடி மூலம், நஸ்ருல்லா படுகொலைக்கு பழி தீர்க்க தயாராக உள்ளது.
இதனிடையே ஒரு குறிப்பிட்ட இடத்தில் திங்கட் கிழமை இரவு இஸ்ரேல் படைகள், லெபனான் எல்லைக்குள் புக முற்பட்டபோது, ஹிஸ்புல்லாவின் கடும் பதிலடியால் பின்வாங்கி ஓடியதாக பெய்ரூட்டைச் சேர்ந்த அரசியல் பார்வையாளர் அலி ரிஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

காசா மீது தரைவழித்தாக்குதல் நடத்தி ஒரு வருடம் நிறைவு பெற உள்ள நிலையில் அங்குள்ள பிணய கைதிகளை இதுவரை மீட்க முடியாத இஸ்ரேல், தற்போது, லெபனான் எல்லைக்குள் நுழையாமலேயே நுழைந்து விட்டதாகவும், ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களை அழிக்கப் போவதாகவும் கதை கட்டி வந்தது அம்பலமாகியுள்ளது.காசாவில் எப்படி வான் வழியாக அமெரிக்கா வெடிகுண்டுகளை போட்டு, அப்பாவி மக்களை கொன்று குவித்தார்களோ, அதே போலவே லெபனான் மீதும் குண்டு மழை பொழிந்து அப்பாவி மக்களை இஸ்ரேல் கொன்று வருகிறது. வேறு எந்த ராணுவ வெற்றியையும் பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button