
100க்கணக்கான பெண்களை மிரட்டி பணியவைத்த பாஜக கூட்டணி வேட்பாளர்.. அரசு பெண் அதிகாரிகள் முதல் பணிப்பெண்கள் வரை..பொள்ளாச்சி சம்பவத்தையே தோற்கடித்த கர்நாடக சம்பவம்..
பொள்ளாச்சி சம்பவத்தையே மிஞ்சும் சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், பாஜக கூட்டணியின் ஹாசன் தொகுதி வேட்பாளருமான பிரஜ்வால் ரேவன்னா தொடர்பான வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் HD ரேவன்னாவின் மகனான பிரஜ்வால் ரேவன்னா, பாஜக கூட்டணியின் சார்பில் மீண்டும் ஹாசன் தொகுதியில் போட்டியிடுகிறார்.பிரதமர் மோடி தொடங்கி பலரும் ரேவன்னாவுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன் ஏப்ரல் 23 அன்று பிரஜ்வாலின் வீடியோக்கள் அடங்கிய பென்ட்ரைவ்கள் ஹாசன் தொகுதி முழுவதும் பரவின.அந்த வீடியோக்களில் அரசு அதிகாரிகள் முதல் வீட்டு பணிப்பெண்கள் வரை பலர் பிரஜ்வாலின் இச்சைக்கு இரையாகியுள்ளது தெரியவந்தது.
பிரஜ்வால் 2019ல் ஹாசன் தொகுதியின் MPயான பின் நூற்றுக்கணக்கான பெண்களுடன் பழகி பின்னர் அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே பிரஜ்வாலின் தந்தை HD ரேவன்னா மீதும் பாலியல் புகார் எழுந்துள்ளன.ரேவன்னாவின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலைசெய்த பெண் ஒருவர் HD ரேவன்னா தன்னை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த கர்நாடகாவின் மாநில மகளிர் ஆணையத்தலைவர் நாகலட்சுமி சவுத்ரி முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார்.இந்நிலையில் கர்நாடகாவில் பூதாகரமாகியுள்ள இவ்விவகாரம் குறித்து சிறப்பு விசாரணைக்குழு அமைத்து முதல்வர் சித்தராமைய்யா உத்தரவிட்டுள்ளார்.இவ்விவகாரம் முன்னரே பாஜக தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும், பாஜக தலைமை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் பாஜக தலைவர் தேவராஜ் கவுடா கர்நாடக மாநில பாஜக தலைவர் py விஜயேந்திராவுக்கு எழுதியிருந்த கடிதத்தில் பிரஜ்வாலின் 2967 ஆபாச வீடியோக்கள் அடங்கிய பெண் ட்ரைவ் தன்னிடம் சிக்கியுள்ளதாகவும், மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் பாஜக கூட்டணி வைத்தால் இவ்விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் என எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.
இவ்விவகாரத்தில் பாஜக தலைவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்கப்படும் என துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் பிரஜ்வால் ரேவன்னா மீது பிரிவு 354-A,354-D,506,509 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே தேர்தல் முடிந்த அன்றே பிரஜ்வால் ரேவன்னா ஜெர்மனிக்கு தப்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்விவகாரம் கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பல இடங்களிலும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.