பள்ளி மாணவர்களுக்கு கோச்சிங் செண்டர் நடத்தி 250 கோடி மோசடி – அமலாக்கத்துறையில் சிக்கிய பின்னணி

பிரபல தனியார் பயிற்சி நிறுவனமான FIITJEE இன் தமிழகத் தலைவர் அங்கூர் ஜெயின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னையில் உள்ள FIITJEE-யின் கீழ்ப்பாக்கம் கிளை, பிரத்தியேக பயிற்சிக்காக ஒரு மாணவருக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை அதிக கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.செலுத்திய பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றுதல் மற்றும் தரமற்ற பயிற்சி தொடர்பாக ரூ.4 கோடி மோசடி நடந்ததாக 140 பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாடு முழுவதும் இந்த நிறுவனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அமலாக்க இயக்குநரகம் ரூ.250 கோடி மோசடியை கண்டுபிடித்துள்ளது.
அந்த நிறுவனம் தரமான பயிற்சியை வழங்காமலும், நிதி நெருக்கடியை காரணம் காட்டி சமீபத்தில் பல மையங்களை திடீரென மூடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான தங்கள் முயற்சிகள் பலனளிக்காததால் பாதிக்கப்பட்ட பெற்றோர் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட FIITJEE, தனியார் பள்ளிகளுடன் இணைந்து நாடு முழுவதும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து வருகிறது. தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காக அந்த நிறுவனம் நேரடியாக பள்ளி ஆசிரியர்களை பணியமர்த்துகிறது.
இருப்பினும் சென்னையில் உள்ள பள்ளிகள் சமீபத்தில் FIITJEE உடனான ஒப்பந்தங்களை முடித்துக் கொண்டன. இதனால் பெற்றோர்கள் மாற்று பயிற்சி மையங்களில் மாணவர்களைச் சேர்க்க வேண்டிய நிலைக்கு ஆளாகினர்.