காலியாகும் இஸ்ரேல் ஆயுத களஞ்சியம்! தரமற்ற கருவிகளை பயன்படுத்துவது அம்பலம்!

இஸ்ரேல் ஆயுத களஞ்சியம் காலியாகி வருவதாக தகவல்…
500 டாங்கிகளை தகர்த்த பாலஸ்தீன் போராளிக்குழுக்கள்…
தரமற்ற டாங்கிகள், கருவிகளை பயன்படுத்துவதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி…
இஸ்ரேல் ஆயுத களஞ்சியத்தில் முக்கிய ஆயுதங்கள் தீர்ந்து வருவதால், ராணுவம் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக அந்நாட்டு ஊடகமான சேனல் 12 பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டது. இந்தத் தகவல்களை இஸ்ரேல் ராணுவ உயர் அதிகாரிகள் மறுத்தாலும், பின்னர் துறை ரீதியான விசாரணைகளுக்கு பிறகு, வெளியான தகவல்கள் உண்மை என தெரியவந்துள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அந்த ஊடகத்திடமே தங்களது புகார்களை பதிவு செய்துள்ளதாக அந்த சேனல் குறிப்பிட்டுள்ளது., குறிப்பாக ராணுவ வீரர்களுக்கான பிரத்யேக உடைகள், காலணி, உடற்கவசம், தலைக்கவசம், பைனாகுலர், வெடிகுண்டு தடுப்பு உடைகள் உள்ளிட்ட உயிர் காக்கும் கருவிகள் பற்றாக்குறை நிலவுவதாக கூறியுள்ளனர்.
இதுமட்டுமின்றி கடந்த 9 மாதப் போரில் இஸ்ரேலின் பல்வேறு வகையான 500 கவச வாகனங்களை போராளிக்குழுக்கள் தகர்த்துள்ளன. இந்நிலையில், காலவதியானதாக கருதப்பட்டு, நிறுத்தப்பட்ட M113 கவச வாகனங்கள் ஆங்காங்கே போர்களங்களில் தென்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
மெர்க்காவா டாங்கிகளோடு ஒப்பிடும் போது, இந்த M113 கவச வாகனங்கள் பாதுகாப்பு குறைந்தவை. எளிய தாக்குதலிலும், அதில் பயணம் செய்பவர்கள் கொல்லப்பட்டு விடுவார்கள் என கூறப்படுகிறது. இதனால் போதிய அளவில் டாங்கிகள் இல்லாததால், காலவதியான டாங்கிகளை இஸ்ரேல் பயன்படுத்துகின்றதா என்ற சந்தேகத்தையும் அந்நாட்டு ஊடகங்கள் எழுப்பியுள்ளன.
இதுமட்டுமின்றி, இஸ்ரேலின் பிரதான எதிர்கட்சித் தலைவர் யாயிர் லாபித் என்பவர், இஸ்ரேல் ராணுவம், ரிசர்வ் படைகளுக்கான இயல்புகளோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. நீண்ட கால போர்களை அந்த வீரர்களால் தாக்குபிடிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
====