அரசியல்தமிழ்நாடு

திமுகவிற்கு எதிராக சாட்டையை சுழற்றிய எடப்பாடி பழனிசாமி

தோட்டத்து வீடுகளை குறிவைத்து அரங்கேறும் பயங்கரம்... திமுகவிற்கு எதிராக பொங்கியெழுந்த எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் கிராம பகுதிகளில் வீடுகளில் தனியாக வசிக்கும் முதியவர்களை கொலை செய்து நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்கும் கொடூர கொள்ளை முறை கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்ட பதிவில் நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்டதற்கும், அதற்கு முன்பு நிகழ்ந்த பல்லடம் மூவர் கொலை வழக்கு, சிவகிரி இரட்டை கொலை உள்ளிட்ட கொலை சம்பவங்களுக்கும் கண்டனங்களை பதிவு செய்திருந்தார்.

தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் அவ்வப்போது வீடுகளில் தனியாக வசிக்கும் முதியவர்கள் கொலை செய்யப்படுவது நிகழ்ந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நிகழ்ந்த பல்லடம் மூவர் கொலை வழக்கிலிருந்து இந்த விவகாரம் பூதாகரமாகி வருகிறது. அதற்கு ஏற்றார் போல் குறைந்த கால இடைவெளியில் அதிகமான முதியவர்கள் கொலை நடப்பதும் அதிகரித்துள்ளது. கடந்த பல்லடம் கொலை சம்பவத்தில் தெய்வசிகாமணி, அலமேலு அவர்களது மகன் செந்தில்குமார் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தின் விசாரணைகளின் போதே அதே பகுதியில் முன்னதாக இதே பாணியில் தொடர்ந்து வீடுகளில் மூன்று கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக முன்னணி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவரும் ஓய்வு பெற்ற கோவை மாநகர காவல் உளவுத்துறை உதவி ஆணையருமான ரத்தின சபாபதி.

இதனை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த விளக்கேத்தி என்ற கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி, பாக்கியம்மாள் கடந்த மே ஒன்றாம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அதில் பாக்கியம்மாள் அணிந்திருந்த தாலிக்கொடி, வளையல் என 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதில் கைதான மூன்று பேருக்கும் பல்லடம் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்திருந்தனர். குறிப்பாக தோட்டத்து வீடு முதியவர்கள் சிசிடிவி இல்லாதது கொலை செய்யப்பட்டுள்ள விதங்கள் உள்ளிட்டவை ஒத்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு தொடர் கொலை சம்பவங்கள் நடப்பதும் குறிப்பாக கொங்கு பகுதிகளில் இத்தகைய கொலைகள் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிரான கண்டனத்தை தெரிவித்திருந்த எடப்பாடி பழனிச்சாமி, பல்லடம் மற்றும் சிவகிரி வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மட்டுமே இந்த குற்றங்களை செய்தவர்களா? என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளார். மேலும் முதியவர்களின் பாதுகாப்பு தொடர்பான வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழகத்தில் ஊரக பகுதிகளில் வயதானவர்களை குறிவைத்து கொலை கொள்ளை போன்ற சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது என்பது வேதனை அளிக்க கூடியதாக இருக்கிறது என கருத்து தெரிவித்திருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆக சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தற்போதைய பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கும் முதியவர்கள் கொலையை தடுக்க காவல்துறை எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள போகிறது. ஏற்கனவே தனியாக வசிக்கும் முதியவர்களை கணக்கெடுக்கப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க கணக்கெடுக்குமாறும், அடிக்கடி சென்று பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் போலீஸ் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டிருந்தார். சென்னை மற்றும் குறிப்பாக சென்னையை தாண்டி முதியவர்களை கணக்கெடுப்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அதன் தொடர் நடவடிக்கையாக உரிய பாதுகாப்பு வழங்கப்படுமா என்ற கேள்விதான் காவல்துறை முன் மக்கள் தரப்பிலிருந்து வைக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button