இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த காளான் பற்றி தெரியுமா?

இந்தியாவிலேயே விலையுயர்ந்த பூஞ்சை குச்சி காளான் பற்றி உங்களுக்குத் தெரியுமா?. ஆம், அழகிய இமயமலைகளில் மறைந்திருக்கும் அரிய மற்றும் பார்க்கவே வித்தியாசமான தோற்றம் கொண்ட இந்த காளானின் விலை ஒரு கிலோ 40 ஆயிரம் ஆகும். மோர்செல்லா எஸ்குலெண்டா என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த பூஞ்சை குச்சி காளான் பார்க்க தேன்கூடு போன்ற வித்தியாசமான அமைப்பைக் கொண்டுள்ளது. இது பண்ணைகளில் வளர்க்கக்கூடிய காளான் இல்லை, முற்றிலும் காடுகளில் வளரக்கூடியது. காடுகளிலும் சாதாரணமாக சூழ்நிலையில் எளிதாக வளரக்கூடியது கிடையாது. பனி உருகிய பின்னர், ஏற்படும் காட்டுத்தீக்குப் பிறகு மிகவும் அபூர்வமான சூழ்நிலையில் வளரக்கூடியதாம்.
செங்குத்தான, ஆபத்தான மலை பரப்புகளில் இலை சருகுகளுக்கு கீழ் மறைந்திருக்கும் காளான்களை தேடி எடுப்பதே மிகப்பெரிய சவாலான காரியம். உள்ளூர் கிராமவாசிகள் அவற்றைத் தேடுவதற்காக, உயரமான மலைக் காடுகள் வழியாக பல வாரங்களாக நடைபயணம் மேற்கொள்கிறார்கள். இந்த காளானை தேடிச் செல்பவர்கள் உயிருக்கே உத்தரவாதம் கிடையாது என்கிற அளவுக்கு காட்டு விலங்குகளையும், காடுகளின் கடினமான சூழ்நிலையையும் சமாளிக வேண்டியுள்ளது. இந்த காளான்கள் முக்கியமாக இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட் பகுதிகளில் வளர்கின்றன.
மிகவும் அரிதான சூழ்நிலையில் வளரக்கூடியது, தேடி கண்டுபிடித்து அறுவடை செய்வதில் உள்ள சிக்கல்கள், மருத்துவ குணம் மற்றும் தனித்துவமான ருசி இது எல்லாம் சேர்ந்து தான் இந்த காளானை இந்தியாவிலேயே காஸ்ட்லியான காளானாக மாற்றியுள்ளது.