திசை திருப்பப்படும் கவனம் – கள்ளச் சாராய சாவுகள்! உண்மையான தவறு எது?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளை ஒவ்வொரு தரப்பினரும், தங்களுடைய ஆதாயத்துக்காக பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. அரசுத் தரப்போ, எப்படியாவது, இந்த விவகாரம் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், மேலும் தங்களுடைய டாஸ்மாக் கடைகளுக்கு இதனால் எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் உள்ளனர். இதனாலேயே உதவித் தொகைகள், நிவாரணங்கள் அள்ளிவிடப்பட்ட வருகின்றன.
மற்றொரு பக்கம் இதனை அரசியலுக்காக பயன்படுத்தி ஆதாயம் அடைந்து விட வேண்டும் என்பதில், பிரதான எதிர் கட்சியான அதிமுக தொடங்கி, உதிரிக் கட்சியான பாஜக வரை மும்முரமாக களமிறங்கி வருகின்றன. உண்மையில் அவர்கள் ஆட்சியில் அல்லது அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும், இதே நிலை தான் இருந்தது. இப்போதும் இருக்கிறது.
உண்மையில் கள்ளக் குறிச்சியில் நடந்தது என்ன? டாஸ்மாக்கில் அதிக விலை கொடுத்து, மது வாங்க முடியாமல், குறைந்த விலைக்கு கிடைத்த விஷத்தை வாங்கி அருந்தி, மாண்டுள்ளனர். அவர்களை பொருத்தவரை, தேவை போதை. அவர்களது மனைவி பற்றியோ, குழந்தைகள் பற்றியோ, இறந்தவர்களுக்கு எந்த அக்கறையும் இருந்திருக்க வாய்ப்பில்லை.
மது இல்லாவிட்டால், கஞ்சா, அது இல்லாவிட்டால் மற்றொரு போதைப் பொருள். எனவே போதைக்காக ஏங்கும் மக்களாக பெரும்பகுதி மக்கள் ஆக்கப்பட்டு விட்டனர் என்பது தான் கள்ளக்குறிச்சி சம்பவம் உணர்த்தும் செய்தி.
இங்கு மெத்தனால் குடித்ததால் இறந்தார்கள், டாஸ்மாக்கில் நல்ல சாராயம் விற்கிறது, அதனை ஏன் வாங்கவில்லை போன்ற விவாதங்கள் நடந்து வருகின்றன.
போதை என்றால் எல்லாமே போதை தான். மதியை மயக்கும் போதை தான், பல குற்றங்களுக்கு தாயாக உள்ளது.
போதையில் தான் கொலை, கொள்ளை, பலாத்காரம் போன்ற பல சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன.
ஆனால் குற்றங்களின் ஊற்றுக் கண்ணாக உள்ள மதுவை ஒழிக்க எந்த ஆட்சியாளர்களும் முன்வருவதில்லை. காரணம் அதன் மூலம் கிடைக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம்.
எனவே போதையை தீவிரமாக ஒழிக்கும் ஒரு தலைவரால் மட்டுமே, இத்தகைய சமூக தீமைகளை அகற்ற முடியும்.
சினிமாவில் போதைக் கலாச்சாரத்தை ஊக்குவித்து விட்டு, பொதுமக்கள் மத்தியில் நல்லவர்கள் போன்று வேடம் போடும், நடிகர்களாலோ, மாறி மாறி டாஸ்மாக் மூலம் லாபம் சம்பாதிக்கும் அரசியல்வாதிகளாலோ, ஒரு போதும், இந்த சமூகத் தீமையை ஒழிக்க முடியாது.
====