“கேவலமான கருத்து!” சேனலுக்கு தடை இல்லை!

பிரபல ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டின் ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனலுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், அந்த பேட்டியை ஒளிபரப்பிய, ரெட்பிக்ஸ் யூ டியூப் சேனல் உரிமையாளர் ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மே 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து சுமார் 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஆகஸ்ட் 6ஆம் தேதி விடுதலையானார். இதனிடையே அவரது ஜாமீன் நிபந்தனையில், அவரது சேனலை முடக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், அவர் தனது சேனலை மூட வேண்டும் என உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து பெலிக்ஸ் ஜெரால்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.அவரது மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, அந்த வீடியோவில் பேசிய விசயங்கள் கேவலமானவை என நீதிமன்றம் கடும் விமர்சனத்தை முன்வைத்தது. அதே நேரம் சேனலை மூடியது அதிகப்படியான நடவடிக்கை எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.