சுரேஷ்கோபி வெற்றிக்கு ரகசியமாக உதவியதா சிபிஎம்? சர்ச்சைகளுக்கு பின்னணி?

கேரள மாநில ஏடிஜிபி அஜித் குமார், ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா கொசபலேவை சந்தித்து பேசியுள்ள விவகாரம் அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நெருக்கமான அதிகாரியாக கருதப்படும் அஜித் குமார், ஏன் ஆர்எஸ்எஸ் தலைவரை சந்தித்தார் என்ற கேள்வியை எதிர்கட்சியான காங்கிரஸ் எழுப்பியுள்ளது.
பினராயி விஜயனுக்கு சாதகமான சில விசயங்களை பாஜக மேற்கோள்ள வேண்டும் என்பதற்காக இந்த சந்திப்பு நடந்ததாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கேரள ஏடிஜிபி அஜித் குமார், இந்த சந்திப்பு முழுக்க முழுக்க தனிப்பட்ட சந்திப்பு என்றும், தன் மீதான பல்வேறு புகார்கள் குறித்து விசாரிக்க காவல்துறையில் ஒரு குழு உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.இந்த சர்ச்சையின் பின்னணியை பார்க்கலாம். சிபிஎம் ஆதரவு எம்எல்ஏவான அன்வர் என்பவர், கேரள ஏடிஜிபி அஜித் குமார் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளார்.
அதில் முதல் குற்றச்சாட்டு, கேரளாவிற்கு வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம் மூலம் ஏடிஜிபி மற்றும் சில அதிகாரிகள் ஆதாயம் பெற்று வருகிறார்கள் என்பது பிரதான குற்றச்சாட்டு. ஒரு தங்க வியாபாரி மாயமான நிலையில், அவரை ஏடிஜிபி கொன்றுள்ளதாக அதிர வைக்கும் குற்றச்சாட்டை எம்எல்ஏ அன்வர் சுமத்தியுள்ளார்.இதுமட்டுமல்ல, மற்றொரு பரபரப்பு குற்றச்சாட்டு என்னவென்றால், தங்க கடத்தல் வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
அந்த வழக்கில் இருந்து பினராயி விஜயனின் பெயரை நீக்க, ஒரு தந்திர வேலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, திருச்சூரில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபியை வெற்றி பெற வைக்க, சிபிஎம் கட்சி உதவியதாக நாசர் குற்றம்சாட்டியுள்ளார்.அதாவது திருச்சூரில் பாரம்பரியமாக நடைபெறும் பூரம் திருவிழாவில் காவல்துறையினர் அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், அந்த கட்டுப்பாடுகள் பலவற்றை தகர்த்து, வழக்கம் போல் பூரம் திருவிழா நடைபெறுவதற்கு நடிகர் சுரேஷ் கோபி ஒரு காரணமாக இருந்தார்.
இது அனைத்தும் ஒரு டிராமா என்றும், சுரேஷ் கோபியை ஹீரோவாக சித்தரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, காவல்துறையினர் வேண்டுமென்றே கட்டுப்பாடுகளை விதிப்பது போன்று, விதித்து, அதனை சுரேஷ் கோபி போராடி, ரத்து செய்தது போன்று காட்சிகளை உருவாக்கி, அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்றுத் தந்தது என அனைத்தும் நாடகம் என அன்வர் குற்றம்சாட்டியுள்ளார்.இந்த 2 முக்கிய புகார்கள் கேரளாவை உலுக்கிய நிலையில், 3வதாக, ஆர்எஸ்.எஸ் தலைவரை, பினராயி விஜயனுக்கு நெருக்கமான கேரள ஏடிஜிபி சந்தித்தது புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏடிஜிபி அஜித் குமார் பல முக்கிய வழக்குகளை கையாண்டு கேரள காவல்துறையின் ஜேம்ஸ்பாண்டாக பார்க்கப்படுபவர். குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள மீனவர்களை, இத்தாலி கப்பற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அவர்களை கடலுக்கே சென்று கைது செய்து அழைத்து வந்து, மக்களால் ஹீரோவாக பார்க்கப்பட்டவர் அப்போதைய கொச்சி கமிஷ்னராக இருந்த இந்த அஜித் குமார்.
மேலும் அண்மையில் கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் நடைபெற்ற, குண்டு வெடிப்பு வழக்கை கையாண்டார். இப்படி பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை கையாண்டு மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் தீவிர பாஜக, ஆர்எஸ்எஸ் சிந்தாந்த எதிர்ப்பு கொண்ட இயக்கமான சிபிஎம், இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.