இஸ்ரேல் கப்பலுக்கு அனுமதி மறுப்பு – ஆப்ரிக்க நாடான நமீபியா அதிரடி!

வெடி மருந்துகளுடன் வந்த இஸ்ரேல் ஆயுத கப்பல்…
நங்கூர மிட அனுமதி மறுத்த நமீபியா…
ஏழை நாடாக இருந்தாலும் துணிச்சல் முடிவு…
கிரிமினல் நடவடிக்கை, பயங்கரவாதம், போர்க்குற்றம் ஆகிய காரணங்களால் உலக அரங்கில் இருந்து தொடர்ந்து தனிமைப்பட்டு வருகிறது இஸ்ரேல். இந்நிலையில் ஆப்பிக்க நாடான நமீபியா நோக்கி வெடி மருந்துகள் நிரப்பப்பட்ட இஸ்ரேலின் MV Kathrin என்ற கப்பல் வந்துள்ளது. வியட்நாமில் இருந்து ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு வந்த அந்த கப்பல், ஓய்வு மற்றும் பராமரிப்புக்காக, நங்கூரமிடுவதற்கு அனுமதி கேட்டுள்ளது.
இந்த நிலையில், தங்களது கடல்பரப்பில் இஸ்ரேல் ஆயுத கப்பலுக்கு அனுமதி இல்லை என நமீபியா அரசு அதிரடியாக அறிவித்து, திருப்பி அனுப்பியது.
காசாவில் நடைபெறும் போர்க்குற்றங்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக நமீபியா நீதித்துறை பெண் அமைச்சர் இவோன் தௌசாப் (Yvonne Dausab) குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாக கொண்ட நமீபியா ஒரு ஏழை நாடாகும். இருப்பினும் துணிச்சலுடன் அமெரிக்காவின் கூட்டாளியான இஸ்ரேலுக்கு கருப்பு கொடி காட்டியுள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறவெறியின் ஒரு பகுதியாக ஆப்ரிக்க நாடுகள் கருதி வருகின்றன. இதன் காரணமாகவே தென் ஆப்ரிக்கா, தானாக முன்வந்து, சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது.
இஸ்ரேலுக்கு நிலக்கரி ஏற்றுமதி செய்வதை தென் அமெரிக்க நாடான கொலம்பியா நிறுத்தியுள்ளது. பல தென் அமெரிக்க நாடுகள் இஸ்ரேல் உடனான தூதரக உறவுகளை துண்டித்துள்ளன.
ஆனால் சவுதி, அமீரகம், எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட அரபு சன்னிப்பிரிவு பணக்கார முஸ்லீம் ஆட்சியாளர்கள் தொடர்ந்து இஸ்ரேல் உடன் உறவுகளை பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
=====