அதிகாலையில் தலையில் விழுந்த இடி! டெல்லி விமான நிலைய மேற்கூரை தூண் விழுந்து விபத்து!

டெல்லி விமான நிலையத்தில் சரிந்து விழுந்த மேற்கூரையால் ஒருவர் பலி, போக்குவரத்து நிறுத்தம்..…
கட்டிட பணிகள் நிறைவுபெறாத நிலையிலும், மோடி அவசர அவசரமாக திறந்து வைத்ததாக காங்கிரஸ் குற்றச்சாட்டு…
டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை மற்றும் அதனை தாங்கியிருந்த தூண் விழுந்ததில் வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் பலியானதுடன் 8 பேர் காயம் அடைந்துள்ளனர். 3 கார்கள் சேதமடைந்துள்ளன. இதனால் டெர்மினல் ஒன்றில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இது மிகப்பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் 10 விமான நிலையங்களை திறந்து வைத்த மோடி, டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் ஒன்று கட்டிடத்தையும், கட்டி முடிப்பதற்கு முன்பே திறந்து வைத்ததாக காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த டெர்மினல் ஒன்று கட்டிடம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அதாவது, 2009ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகவும், அதில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, பிரதமர் மோடி, தேர்தலுக்கு முன்பு, அவசர அவசரமாக திறந்து வைத்ததாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
மேலும் மோடி ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் நிலவிய ஊழல்கள் காரணமாக இதே போன்று பல கட்டிடங்கள் இடிந்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் டெல்லி விமானநிலையம் டெர்மினல் 1 விபத்து,
ஜபல்பூர் விமான நிலைய மேற்கூரை விபத்து,
சேதமடைந்த அயோத்தி புதிய சாலைகள்,
ராமர் கோவில் நீர்கசிவு,
மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க் ரோடு விரிசல்கள்,
2 ஆண்டுகளில் பீகாரில் இடிந்து விழுந்த 13 பாலங்கள்,
பிரகதி மைதான் சுரங்க வெள்ளம்,
குஜராத் மோர்பி பால விபத்து ஆகிய சம்பவங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.